திருமணம் ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க முடியாது - சினேகா வருத்தம்!!!

Tuesday,27th of November 2012
சென்னை::திருமணம்த்திற்குப் பிறகு எந்த நடிகையாலும் ஹீரோயினாக நடிக்க முடியாது. அப்படியே அவர்கள் நடிக்க விரும்பினால், அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடிக்க தான் அழைக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட எழுதப்படாத சட்டம், தற்போது உள்ள தமிழ் சினிமாவில் உள்ளது. என்று நடிகை சினேகா விழா ஒன்றில் கூறி வருத்தப்பட்டார்.

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் ஹரிதாஸ் படத்தில் சினேகா ஹிரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக பொல்லாதவன் கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் எட்டு வயது சிறுவன் ஒருவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு பத்திரிகையாளர்களை படப்பிடிப்புக்குழுவினர் சந்தித்தனர். அப்போது பேசிய சினேகா, "பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் தான் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. நான் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றாலும், அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது ஒரு சில படங்கள் தான். அந்த வகையில் ஹரிதாஸ் படமும் ஒன்று. இப்படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் குமார் சொன்னபோது நான் உடனே சம்மதம் தெரிவித்தேன். பிறகு நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்டேன். அதற்கு இயக்குநர் குமார், அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. என்றார். எனக்கு அதுவே மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

காரணம், தற்போது உள்ள தமிழ் சினிமாவில் திருமணம் ஆனப் பிறகு, அந்த நடிகைகளால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்ற எண்ணம் இருக்கிறது. ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கூட கிடைக்காது. அப்படி இருக்கையில், இவர்கள் திருமணம் ஆனாலும் பரவாயில்லை இந்த கதாபாத்திரத்திற்கு சினேகாதான் சரியாக இருப்பார் என்று விரும்பியதாலும் இப்படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன்." என்றார்.

தொழிலதிபர் டாக்டர்.வி.ராம்தாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜாமுகம்மது படத்தொகுப்பு செய்கிறார்.

பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிந்துள்ள இப்படம், அப்பாவுக்கும், பிள்ளைக்கும் இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாகும்.

Comments