வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன் : பாலா பேட்டி!!!

Tuesday,27th of November 2012
சென்னை::வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன் என்றார் பாலா. ‘பரதேசி படம் பற்றி இயக்குனர் பாலா கூறியதாவது: 1940களில் டீ எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் கதை. ஒவ்வொருவரும் டீ குடிக்கும்போது இப்படம் ஞாபகம் வரும். இதில் அதர்வா நடித்திருக்கிறார். மறைந்த முரளிக்கு நாம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அதர்வாவை இதில் பயன்படுத்தி இருக்கிறேன். ‘நடிகர், நடிகைகளுக்கு கருப்பு மேக்கப்போட்டு நடிக்க வைப்பது ஏன்? என்கிறார்கள். கதைப்படிதான் கதாபாத்திரங்கள் அமைக்கப்படுகின்றன. வேண்டுமென்றே சிவப்பு நடிகர்களுக்கு கருப்பு மேக்கப் போடவில்லை.

இந்த படத்தில் கருப்பு மேக்கப் போட்டவரும் நடித்திருக்கிறார், சிவப்பு நிற நடிகையும் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்காதது ஏன் என்கின்றனர். அதற்கு காரணம் பத்திரிகைகள்தான். இளையராஜாவை தவிர வேறு இசை அமைப்பாளருடன் நான் பணியாற்றுவதில்லை என்று எழுதுகிறார்கள். அதனால்தான் இம்முறை ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதி இருக்கிறார். என் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வரும். எனக்கு குழந்தை பிறந்த பிறகு வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன். இதில் பணியாற்றிய எல்லோருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை. அடுத்த மாதம் 21ம் தேதி படம் ரிலீஸ். இவ்வாறு பாலா கூறினார்.

Comments