நடிகை பிதுஷி கொலை அதிர்ச்சி அளிக்கிறது: இயக்குனர் கவுதம்மேனன் பேட்டி!!!

Thursday,25th of October 2012
சென்னை::மிஸ் சென்னை போட்டியில் அழகி பட்டம் வென்ற மாடல் அழகி பிதுஷி மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் பிரகாஷ்ராஜ் மகள் கேரக்டரில் வந்தார். படத்திலும் வில்லனால் பிதுஷி படுகொலை செய்யப்படுவதுபோல் காட்சி இருந்தது. சினிமாவில் வந்ததுபோல் நிஜத்திலும் நடந்து விட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த என்ஜினீயர் கேதார் சதாசிவ் (வயது 26) என்பவரை காதலித்து மணந்தார். மும்பை அந்தேரியில் கணவருடன் வசித்து வந்தார். அந்த வீட்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கொலை குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறியதாவது:-

பிதுஷி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க நிறையபேர் முன்வந்தனர். அவர்களில் பிதுஷி பொருத்தமானவராக இருந்தார். சில விளம்பரங்களில் மாடலாக நடித்து இருந்தார். அவர் தோற்றம் எனக்கு பிடித்ததால் தேர்வு செய்தேன்.

படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளில் பிதுஷி சோர்வாக இருந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்தனர். படம் முடிந்த பிறகும் அவரது தாய் என்னுடன் தொடர்பில் இருந்தார். மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்றார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட செய்தியால் அதிர்ந்தேன்.

இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.

Comments