டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 'திருவிளையாடல்' படம் மீண்டும் ரிலீஸ்!!!

Friday,7th of September 2012
சென்னை::சிவாஜி, சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ படம் 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. செண்பகபாண்டியனாக முத்துராமன், புலவர் தருமியாக நாகேஷ். மனோரமா அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார்.

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி இப்படம் தயாரானது,. சிவன் கேரக்டரில் சிவாஜி வந்தார். பார்வதி கேரக்டரில் சாவித்திரி நடித்தார். இப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் காமெடி வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப்பா’, ‘இன்றொரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெருகூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது.

Comments