இந்தியன் காப்பி கல்சர் - தத்துவப் பார்வை!!!

Wednesday,19th of September 2012
சென்னை::இணையத்தை திறந்தால் எந்தப் படம் எந்த மொழியிலிருந்து திருடப்பட்டது என்ற தகவல்கள் கொட்டுகின்றன. படம் பார்க்கும் சராச‌ரி ரசிகனுக்கு இந்த திருட்டுகளின் மூலம் சகஜமாக‌த் தெ‌ரிந்திருக்கிறது. அப்படியிருக்க இந்தியன் காப்பி கல்சர் என்று தனியாக நாம் வேறு எழுத வேண்டுமா? காப்பி கல்சர் தொடர்ந்து வராமல் போனதற்கு இந்த கேள்வி உருவாக்கிய தடுமாற்றம் முக்கிய காரணம். ஆனால் காப்பி என்பது அதன் மூலத்தை தெ‌ரிந்து கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. அது தத்துவச் சிக்கலை உள்ளடக்கியது. இதனைத்தான் வரப்போகிற பகுதிகளில் நாம் பார்க்கப் போகிறோம்.

சில விமர்சகர்கள் பிற மொழியிலிருந்தோ சொந்த மொழியிலிருந்தோ காப்பியடித்து ஒரு படத்தை உருவாக்கினால் அதனை காப்பி என்று சொல்வதில்லை. மறு உருவாக்கம் என்ற பதத்தை பிரயோகிக்கிறார்கள். ஒ‌ரி‌ஜினல் என்றால் உருவாக்கம். அதை காப்பி செய்தால் மறு உருவாக்கம். உருவாக்கத்துக்கு மிக அருகில் இருக்கும் சொல் மறு உருவாக்கம். காப்பி என்ற வார்த்தை தரும் அசௌக‌ரியத்தை மறு உருவாக்கம் தருவதில்லை. மாறாக ஒரு படைப்பாளிக்கு‌ரிய அங்கீகாரத்தை இச்சொல் கோருகிறது. மறு உருவாக்கம் என்ற பதத்தை இவர்கள் பயன்படுத்த என்ன காரணம்?

விமர்சகரும், ஆய்வாளருமான ராஜன்குறை - இவர் தொடர்ந்து காட்சிப்பிழைதிரை என்ற பத்தி‌ரிகையில் எழுதி வருகிறார். கதாநாயகனின் மரணம் என்ற சினிமா தொடர்பான புத்தகத்தின் ஆசி‌ரியர் - வால்டர் பெஞ்சமினின் தி வொர்க் ஆஃப் ஆர்ட் இன் த ஏ‌ஜ் ஆஃப் மெக்கானிகல் ‌‌ரீ புரொடக்சன் கட்டுரையை முன் வைத்து காட்சிப்பிழைதிரையில் கட்டுரை ஒன்றை சில மாதங்கள் முன்பு எழுதினார் ராஜன்குறை. அந்தக் கட்டுரையில் மேலே உள்ள கேள்விக்கான பதில் உள்ளது. கட்டுரையை நேரடியாக அணுகினால் பலரும் சினிமா பார்ப்பதை விட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளதால் கட்டுரையின் சாராம்சத்தை அடுத்தடுத்தக் கட்டுரைகளில் மேலோட்டமாக தொட்டுச் செல்லலாம். இப்போது முன்னோட்டமாக சில.

முதலாவதாக அனைத்து காப்பிகளையும் ஒரே தராசில் வைக்க இயலாது. உதாரணமாக உசேன் போல்ட் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்கிறார். எந்த டயட்டை பின்பற்றுகிறார் என்பதை தெ‌ரிந்து அதனை அப்படியே பின் பற்றினாலும் உசேன் போல்டை போல் 9.63 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடக்க முடியுமா என்பது சந்தேகம். ஜாக்கிசான், ஜெட் லீ போடும் சண்டைகளை அப்படியே பிரதி செய்வது என்பது கடினம். அவ்வை சண்முகி Tootsie படத்தின் காப்பியாக இருந்தாலும் பெண்ணாக நடிப்பதற்கு தனித் திறமை வேண்டும். Amores Perros படத்தில் வரும் விபத்து, அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வெ‌வ்வேறு மனிதர்களின் வாழ்க்கை என்ற திரைக்கதை வடிவத்தை ஆய்தஎழுத்து கொண்டிருந்தாலும் இரண்டு படங்களில் வரும் கதைகளும் கதைக்களனும் வேறு. Amores Perros திரைப்படத்தைப் பார்த்த எல்லோராலும் ஆய்தஎழுத்தைப் போல் ஒரு கதையை எழுதிவிட முடியும் என்று சொல்ல முடியாது. காப்பி அடிப்பது என்றாலும் அதற்கும் தனித்திறமை வேண்டும்.

இந்தியன் காப்பி கல்சர் - தத்துவப் பார்வை 2!!!

சென்ற பகுதியில் காப்பிகளில் சவாலான காப்பி, ஈயடிச்சான் காப்பி என இருவகைகள் இருப்பதைப் பார்த்தோம். இரண்டுக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டுமே அறிவு திருட்டுகள்தான். ஆனால் சிலர் இதனை ஒத்துக் கொள்வதில்லை. காப்பிகளை மறு உருவாக்கம் என்று கொண்டாடுகிறார்கள். விமர்சகர் ராஜன் குறை இதில் முதன்மையானவர். அவர்கள் இந்த கருத்துக்கு எப்படி வந்தடைந்தார்கள் என்பதை ராஜன் குறை காட்சிப்பிழை திரை இதழில் எழுதிய கன்னியாகும‌ரியில் வால்டர் பெஞ்சமின் என்ற கட்டுரையின் வழியாக பு‌ரிந்து கொள்ளலாம். அந்த கட்டுரையைதான் இதில் அலசப் போகிறோம்.

சினிமா என்ற கலைப்படைப்பை பெரும்பாலான அறிவு‌ஜிவிகள் எதிர்த்த போது அதனை ஆத‌ரித்த, கொண்டாடிய மேதை வால்டர் பெஞ்சமின். 1936 ல் இவர் எழுதிய தி வொர்க் ஆர்ட் இன் தி ஏ‌‌ஜ் ஆஃப் மெக்கானிகல் ‌ரி புரொடக்சன் (இயந்திர பிரதியாக்க காலத்தில் கலைப்படைப்பு) என்ற கட்டுரையில் சினிமாவின் முக்கியத்துவத்தை எழுதியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து தனது சினிமா குறித்த கருத்துக்களை ராஜன் குறை மேலே குறிப்பிட்ட கட்டுரையில் வி‌ரிவாக எழுதியுள்ளார்.

முதலில் வால்டர் பெஞ்சமின் கட்டுரையின் பிரதான அம்சங்களைப் பார்ப்போம்.

1. பெரும்பாலான கலைப்படைப்புகளை பிரதி செய்ய முடியும். அப்படி பிரதி செய்யும் போது மூலப்படைப்பு (ஒ‌ரி‌ஜினல்) தனியாகவும், பிரதிகள் (காப்பி) வேறாகவும் இருக்கும். பிரதி மூலத்தை ஒத்திருந்தாலும் மூலம் சுமக்கும் காலச்சுவடுகள் பிரதிகளில் இல்லாததால் மூலம் பிரதிகளைவிட அதிக வீர்யமுள்ளதாகவும், மதிப்பு வாய்ந்ததாகவும் கொண்டாடப்படும்.

உதாரணமாக பிகாசோவின் ஓவியங்களை அச்சு அசலாக ஒருவர் வரைந்தாலும் மூலத்தின் மதிப்பு அதற்கு கிடைக்காது. அதேநேரம் மூலம் பல கோடிக்கு விலை போகும்.

2. இயந்திரத்தின் மூலம் பிரதி செய்யக் கூடிய கலைகளில் இந்த மூலம் என்ற தனித்துவம் இருப்பதில்லை. இதனால் மூலத்தை சுற்றியிருக்கும் ஒளிவட்டம் மறைந்து போகிறது. இது அச்சுக்கள் தோன்றிய காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாணயங்கள் ஒரே அச்சில் வார்க்கப்பட்டன. இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் மூலமாகவும், பிரதிகளாகவும் இருக்கின்றன. இவைகளுக்கு மாஸ்டர் பீஸ் அதாவது மூலம் என்று ஒன்று இல்லை. நாணத்தின் மேடான பகுதி அச்சில் குழிவாக இருக்கும். இதனால் நாணயத்தை உருவாக்கும் அச்சையும் நாணயத்தின் மூலமாக கொள்ள முடியாது.

3. அச்சு எந்திரங்களின் வருகைக்குப் பிறகு இயந்திர பிரதியாக்கம் தீவிரமடைகிறது. அச்சில் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டன.

4. அடுத்து புகைப்பட கருவி. சினிமாவின் ஆரம்ப தொடக்கம் இது. புகைப்படம் நெகடிவ் ஆக பதிவாகிறது. அதன்பிறகு அது பல லட்சம் பிரதிகளாகவும் மாறுகிறது. ஆனால் மூலம் என்று எதையும் சுட்ட முடியாது. புகைப்படம் எதைக்காட்சிப்படுத்தியதோ அதைக்கூட புகைப்படத்தின் மூலமாக கருத முடியாது.

5. சினிமா. சினிமா வெறுமனே உலக நடப்புகளை பிரதி செய்வதில்லை, அது புத்துருவாக்கம் - புதிதாக உருவாக்குகிறது என்கிறார் பெஞ்சமின். உதாரணமாக வெடி வெடிக்கும் சத்தத்திற்கு ஒருவன் அதிர்ச்சியடைவதை படம் பிடித்து, அந்த வெடி சத்தத்திற்குப் பதில் கதவு தட்டப்படும் சத்தத்தை வைத்து, கதவு தட்டப்படும் சத்தத்திற்கு அவன் அதிர்ச்சி அடைவது போல் காட்ட முடியும். அதாவது சினிமா மூலம் என்ற ஒன்றை இல்லாமலாக்குகிறது. அது நிகழ்வுகளிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்குகிறது.

பெஞ்சமின் தனது கட்டுரையில் பிரதி செய்யக் கூடிய கலைகளை பற்றி மட்டுமே பேசுகிறார். இயந்திரத்தால் பிரதி செய்யக் கூடிய கலைகளில் மூலம் என்ற ஒன்று இல்லாமலாவதை குறிப்பிடுகிறாரே தவிர, மூலத்தைவிட பிரதி சிறப்பானது என்று குறிப்பிடவில்லை. ஆனால் ராஜன் குறை பெஞ்சமினின் கண்டுபிடிப்புகளை முன்னுதாரணமாக வைத்து தனது சொந்த கருத்துகளை அவரது கட்டுரையில் செருகியுள்ளாh.; அவற்றில் பலவும் அபத்தமானவை. அவை என்ன என்று பார்ப்பதன் வழியாக இவர்களின் மறுஉருவாக்கம் என்ற கோட்பாடு எத்தனை பலவீனமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. பெஞ்சமின் மூலம் தனியாகவும், பிரதி தனியாகவும் இருக்கும், மூலத்துக்கான மதிப்பு பிரதிக்கு இருப்பதில்லை என்று குறிப்பிடுகிறார். ராஜன் குறை இதில் தனது சொந்தச் சரக்கை செருகுகிறார். அதாவது மூலத்தைவிட பிரதி திருத்தமாகவோ, வீர்யமாகவோ அமைந்தாலும் மூலம் நானே ஒ‌ரி‌ஜினல் என்று பெருமை கொண்டாடும் என எழுதுகிறார். இதற்கு அவர் ஓவியம், சிற்பம் என்று எல்லாக்கலைகளையும் உதாரணம் காட்டுகிறார். இது மிகவும் நகைச்சுவையானது. மோனலிசா ஓவியத்தைவிட திருத்தமாகவும், சிறப்பாகவும் வரையப்பட்ட மோனலிசா ஓவியத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வான்காவின் சூ‌ரியகாந்தி ஓவியத்தைவிட திருத்தமாக வரையப்பட்ட சூ‌ரியகாந்தி ஓவியம் இருக்கிறதா?

Comments