நடிகை ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது: சினிமாவுக்காக பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தனர்!!!

Saturday, 29th of September 2012
சென்னை::கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பெண் திருமணமாகி கருவுற்ற காலம் முதல் பிரசவமாகும் வரை உள்ள நிகழ்வுகளை இயற்கையாக படமாக்க முடிவு செய்தார்.

அதற்காக கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை ஸ்வேதா மேனன் திருமணமாகி கருவுற்றிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் ஸ்வேதா மேனனையும், அவரது கணவர் ஸ்ரீவல்சனையும் சந்தித்து பேசினார்.

தனது சினிமா பற்றியும் அதில் ஸ்வேதா மேனனை கர்ப்பிணியாக நடிக்க வைக்கவும் பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு கணவனும்-மனைவியும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. கர்ப்ப காலத்தில் நடைபெறும் அனைத்து சம்பிரதாய சடங்குகளும் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்வேதா மேனன் கடந்த வாரம் மும்பையில் உள்ள நானாவதி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது பிரசவத்துக்காக தனி அறை தயாரானது. அங்கு 3 கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சுகப்பிரசவத்துக்கு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடுகள் தயாரானது. நேற்று மாலை 5 மணி அளவில் ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனே டைரக்டர் பிளஸ்சி, கேமரா மேன் ஜேக்கப், உதவி கேமிரா மேன் பாலு மற்றும் டாக்டர்கள், நர்சுகள் பிரசவ அறைக்கு சென்றனர்.

20 நிமிடம் பிரசவ வலியால் துடித்த ஸ்வேதா மேனனுக்கு 5.27 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. உத்ராடம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ காட்சிகள் அனைத்தையும் படப்பிடிப்பு குழுவினர் படமாக்கினர்.

பிரசவம் முடிந்ததும் நடிகை ஸ்வேதா மேனன் நிருபர்களிடம் கூறும் போது பிரசவ காலம் என்பது பெண்களுக்கு இனிமையான காலம். இது பெண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. இதில் பெரும் பங்கு ஆண்களுக்கும் உண்டு. அதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவே இதற்கு சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது என்றார்.

Comments