நல்ல கதையாக அமைந்தால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்"'ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன் - நடிகை ஸ்ரீதேவி!!!

Saturday,1st of September 2012
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஸ்ரீதேவி, நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன். என்று கூறியிருக்கிறார்.

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, இந்தி சினிமா தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் மூலம் திரையுலகிற்கு மறுபிரவேசம் செய்திருக்கும் ஸ்ரீதேவி, நேற்று சென்னையில் நடைபெற்றை 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் நிருபர்களை சந்தித்து பேசிய ஸ்ரீதேவி, "இத்தனை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எனது மகள்கள் தான். அவர்கள் சின்ன குழந்தையாக இருந்ததால், அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்." என்றார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நீங்கள் இனி தமிழ்ப் படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, "ஏன், நடிக்க மாட்டேன். நான் தமிழ்ப் பொண்ணுதானே! நல்ல கதையாகவும், எனக்கு பொருத்தமான கதாபாத்திரமாகவும் அமைந்தால் நான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்." என்றார்.

ரஜினி-கமலுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், "கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், இதை நியாயமாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். பொருத்தமான கதை அமைந்தால் நடிப்பேன்." என்றார்.

'சீனிகம்', 'பா' ஆகிய இந்திப் படங்களை இயக்கியிருக்கும் பால்கியின் மனைவி கெளரி சிண்டே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

Comments