16 நடன இயக்குநர்கள் நீக்கம் - நடன இயக்குநர்கள் கண்டனம்!!!

Monday,10th of September 2012
சென்னை::திரைப்பட நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து பிரபல நடன இயக்குநர்களான ரகுராம், கல்யாண், ஷோபி, காதல் கந்தாஸ் உள்ளிட்ட 16 பேர், சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கப்பட்டுள்ளனர். இந்த செயலுக்கு நடன இயக்குநர் ரகுராம், தலைமையில் நடன இயக்குநர்கள் கட்டணம் தெரிவித்ததுடன், இந்த நீக்கம் செல்லாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தற்போது 180 நடன இயக்குநர்களும், 1000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் நடன இயக்குநர்களுக்கும், தற்போதைய சங்க நிர்வாகிகளுக்கும் சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததது.

சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர்கள் மெஜாரிட்டியாக இல்லாததால், அவர்களை சங்க நிர்வாகிகள் ஒதுக்கப்படுகிறார்கள். மேலும் எங்களுக்கு இந்த சங்கத்தில் மரியாதை இல்லை என்றும் கூறி, நடன இயக்குநர்களுக்கு என்று தனியாக சங்கம் ஒன்று வேண்டும் என்று கூறி, ரகுராம் தலைமையில் 'தென்னிந்திய நடன இயக்குநர்கள் சங்கம்' என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரகுராம் உள்ளிட்ட முக்கிய நடன இயக்குநர்கள் 16 பேரை திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் நீக்கியிருக்கிறது. மேலும் பெப்சியும் நடன இயக்குநர்களின் புதிய சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறதாம்.

இது தொடர்பாக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரகுராம், "பல பெரிய படங்களுக்கு பணியாற்றிய நடன இயக்குநர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. அதனால் தான் நாங்கள் தனியாக சங்கம் ஒன்றை தொடங்கினோம்.

இந்த நிலையில் எங்களிடம் விளக்கம் கேட்காமல் 16 நடன இயக்குநர்களை சங்கத்தில் இருந்து தன்னிச்சையாக நீக்கி உள்ளனர். இந்த நடவடிக்கை சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு முரணானது, எங்களை பழிவாங்கும் நோக்கத்தில் தான் இந்த செயலை செய்திருக்கிறார்கள். இது பற்றி நாங்கள் அரசாங்கத்திடமும் முறையிட்டிருக்கிறோம்.

பெப்சி நிர்வாகிகளிடம் எங்களைப் பற்றி தவறாக சித்தரித்து எங்களை குற்றவாளியாக ஆக்கியிருக்கிறார்கள். மேலும் நடன கலைஞர்களிடம், நாங்கள் தனியாக சென்று விட்டால் அவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற பொய்யான வதந்தியையும் பரப்பியிருக்கிறார்கள். இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குநர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும் தனியாக சங்கம் இருக்கிறது. ஏன், நமது தமிழ் சினிமாவில் கூட ஒரே துறையாக இருந்தும், கேமரா மேன்களுக்கும், லைட் மேன்களுக்கும் தனி தனியாக சங்கம் இருக்கிறது. அதுபோல நடன துறையிலும் தனி தனியாக சங்கம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இந்த புதிய சங்கத்தை தொடங்கினோம்.

எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை தமிழ் திரையுலகில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் எடுத்துச் சொல்லி, பெப்சி நிர்வாகிகளிடமும் இதைப் பற்றி பேசுவோம். நாங்கள் பெப்சிக்காக எந்தவித ஊதியமும் வாங்காமல், பல நடன நிகழ்ச்சிகளை செய்து கொடுத்திருக்கிறோம். நாங்கள் எப்போதும் பெப்சி பக்கம் தான் என்பதையும் அவர்களுக்கு புரிய வைப்போம்." என்று கூறினார்.

Comments