ஏன் நிறுத்திவிட்டீர்கள்..? விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!!!

Saturday,25th of August 2012
சென்னை::விஜயகாந்த நடிப்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’. அந்த படத்தை இப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் சினேகா பிரிட்டோ இயக்கத்தில் ரீமேக் செய்கிறார்கள். தரமணியில் இந்த ரீமேக் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது திடீரென விஜய் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்தார்.

விஜய்யை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் நடப்பதரியாது அப்படியே நின்றுவிட்டனர். அவர்களின் ஆச்சர்யத்தை மறைத்து “நான் வந்ததும் ஏன் நிறுத்திவிட்டீர்கள். உங்கள் வேலையை செய்யுங்கள் நான் வேடிக்கை பார்க்கிறேன்” எனக்கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அதுவரை எடுத்துக்கொண்டிருந்த பாடல் காட்சியை விஜய்யிடம் காண்பித்தும், புதுவிதமாக இந்த பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கிறோம் என விளக்கியும் விஜய்யிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்டனர் படக்குழுவினர்.

இயக்குனர் சினேகா பிரிட்டோ, லேசர் முறையில் ஷூட்டிங் எடுப்பதை பற்றி விவரித்து ‘இந்த பாடல் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லாக இருக்கும்’ என கூறியிருக்கிறார்.

இதுமட்டுமில்லாமல் வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை 19-ந் தேதி 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். அவரது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்குகிறார்.

இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொள்கிறார். விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் வேலூர், காட்பாடி பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Comments