சினிமாவில் நடிக்க கணவர் தடை விதித்தாரா? மம்தா பதில்!!!

Wednesday,22nd of August 2012
சென்னை::சினிமாவில் நடிக்க கணவர் தடை விதித்தாரா என்பதற்கு பதில் அளித்தார் மம்தா மோகன்தாஸ். ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியதாவது: திருமணத்துக்குபிறகு நடிகைகளுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வராது என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். என் விஷயத்தை பொறுத்தவரை அது உல்டாவாக இருக்கிறது. திருமணத்துக்கு முன் கிடைக்காத நல்ல வாய்ப்புகள் இப்போதுதான் எனக்கு வருகிறது. அதுவும் ஒரே நேரத்தில் இதுவரை வராத அளவுக்கு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதற்கு எனது கணவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எனது நடிப்பு தொழிலுக்கு அவர் தடை விதிக்கவில்லை. மாறாக ஆதரவாக இருக்கிறார். திருமணமாகிவிட்டால் சுதந்திரம் போய்விடும் என்பார்கள். ஆனால் நான் திருமணத்துக்கு பிறகு கூடுதல் சுதந்திரம் பெற்ற பெண்ணாக உணர்கிறேன். அதற்கு காரணம் மற்றவர்களைப்போல் இல்லாமல் எனது பயணம், ஆசைகளுக்கு கணவர் தடை போடுவதில்லை. அமைதியாக முசுடுபோல் இல்லாமல் சுறுசுறுப்பாக சந்தோஷமாக இருப்பதையே அவர் விரும்புகிறார்.

தமிழ் திரையுலகில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கதை அம்சமுள்ள படங்கள் வரும் அதே வேளையில் கமர்ஷியலுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் மலையாள படவுலகில் கிளாமர் வேடங்களைவிட நல்ல கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு தரப்படுகிறது. இதனால் தேர்வு செய்து நடிக்க முடிகிறது. புதிய தயாரிப்பாளர்கள், புதுமுகங்கள் நிறையபேர் திரையுலகுக்கு வருகிறார்கள். நீண்ட நாட்களாக பெண்டிங்கில் இருக்கும் தேனிலவுக்கு விரைவில் கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.

Comments