விஷாலின் சமர் படத்துக்கு தடை!!!

Thursday,23rd of August 2012
சென்னை::விஷால், த்ரிஷா நடிக்கும், 'சமர்' படத்துக்கு மதுரை கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை அக்வாஸ்ரே மூவிஸ் உரிமையாளர் விஜய், மதுரை 5-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நாங்கள் புதுமுகங்களை வைத்து, 'சமர்' என்ற பெயரில் படம் தயாரிக்கிறோம். சக்திமோகன் இயக்குகிறார். ‘சமர்’ என்ற பெயரை, கடந்த ஆண்டு சென்னை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தோம். இப்போதும் புதுப்பித்துள்ளோம். இந்நிலையில், பாலாஜி ரீயல்மீடியா நிறுவனம் சார்பில், 'சமர்' என்ற பெயரில் விஷால், த்ரிஷா நடிக்கும் படத்தை, ரமேஷ் தாண்ட்ரா தயாரித்து வருவதாகவும், இயக்குனர் திரு இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘சமர்’ என்ற பெயரை நாங்கள் பதிவு செய்துள்ளதால், அந்த பெயரில் படம் தயாரிக்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜான்ஸ்டீபன், ராமு ஆஜராகினர். 'சமர்' என்ற பெயரில் சினிமா வெளியிட நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிலளிக்க, பாலாஜி ரீயல்மீடியா நிறுவனத்துக்கும் அதன் உரிமையாளர் ரமேஷ் தாண்ட்ராவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Comments