ர‌ஜினி, ஷங்கரை கவர்ந்த நான் ஈ:-கமர்ஷியல் ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் ஈ!!!

Friday, 13th of July 2012
சென்னை::இன்றைய தேதியில் ஈ தான் கதாநாயகன். மற்ற எந்த ஹீரோக்கள் நடித்தப் படங்களை விடவும் நான் ஈ-யின் வசூல் மிரட்டுகிறது.

ஷங்கர் போன்ற பிரமாண்ட இயக்குனர்கள் கூட ர‌ஜினி, கமல், விக்ரம் என்று பெ‌ரிய நடிகர்களை நம்பியே களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் இந்தப் படம் ஈ-யை நம்பி அதுவும் சி‌ஜி ஈ-யை நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னட நடிகர் சுதீப்தான் முக்கிய கதாபாத்திரம். இவரை தமிழிலும் ச‌‌ரி, தெலுங்கிலும் ச‌‌ரி முக்கால்வாசி ரசிகர்களுக்கு‌த் தெ‌ரியாது.

ர‌ஜினிக்கு நான் ஈ ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தை ரசித்துப் பார்த்தவர் வெளியே வந்து வில்லனாக நடித்த சுதீப்பை கட்டிப் பிடித்து தனக்கேயு‌ரிய சி‌ரிப்புடன் பாராட்டியிருக்கிறார். இதுவரை நான்தான் பெஸ்ட் வில்லன்னு நினைச்சுகிட்டிருந்தேன். என்னையே முந்திட்டீங்க. இந்த பாராட்டில் பரவசமாகிவிட்டார் சுதீப்.

அதேபோல் சென்னை தேவி திரையரங்கில் படம் பார்த்த ஷங்கர் சூப்பர் என்று தனது கமெண்டை தெ‌ரியப்படுத்தியிருக்கிறார். ஹீரோக்களை நம்பாமல் இதேபோல் ஷங்கரும் பிரமாண்ட படங்கள் எடுக்க வேண்டும். செய்வாரா...

கமர்ஷியல் ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் ஈ!!!

தன் எதிர்வீட்டில் வசிக்கும் சமந்தாவை பல வருடங்களாக சுற்றி சுற்றி காதலிக்கிறார் நானி. சமூக சேவை செய்யும் சமந்தாவிற்கு கோடீஸ்வர தொழிலதிபர் சுதீப், பதினைந்து லட்சம் கொடுக்கிறார். சமந்தாவை தன் வசப்படுத்தவே சுதீப் அந்த தொகையை கொடுக்கிறார். சமந்தா நானியை விரும்புகிறார் என்பதை அறிந்து நானியை சித்திரவதை செய்து கொலை செய்கிறார். சுதீப்பை பழிவாங்க நானி ஈ-யாக மறுபிறவி எடுக்கிறார்.

ஈ என்ன செய்துவிட முடியும் என்று சாதாரணமாக நாம் நினைக்கக் கூடும். ஆனால் அந்த ஈ செய்யும் அட்டகாசங்களும் அளப்பறைகளும் பல. வில்லன் சுதீப் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு படுகிறார். நானி தான் ஈ-ஆக மறுஜென்னம் எடுத்திருக்கிறார் என்பது சமந்தாவுக்கு தரியவர. தன் காதலனைக் கொன்ற சுதீப்பை கொல்வதற்கு ஈ-க்கு பல உதவிகள் செய்கிறார் சமந்தா. சின்ன சின்ன ஆயுதங்கள் செய்துகொடுப்பது, ஈ-க்கு தகுந்தவாரு ஹெல்மெட் செய்து கொடுப்பது என சமந்தா ஈ-க்கு உதவி செய்கிறார். இறுதியில் சுதீப்பை ஈ பழி வாங்கியதா? சுதீப் சமந்தாவை பழி வாங்கினாரா? என்பதே கலக்கலாக அசத்தும் அசத்தலான அதிரடி சிஜி க்ளைமேக்ஸ்.

படத்தின் முதல் அரைமணி நேரத்தில் அழகான லவ்வர் பாயாக வந்து நினைவில் பதிந்துவிடுகிறார் ஹீரோ நானி. சமந்தாவும் அளவான நடிப்போடு அழகாக வளம்வருகிறார். தனது வில்லத்தனமான நடிப்பில் காமெடி கலந்து அசத்துகிறார் சுதீப்.

இவர்கள் எல்லோரையும் விட படத்தின் ஹைலைட் ஈ தான். கமர்ஷியல் ஹீரோக்கள் அத்தனைபேரையும் தூக்கி சாப்பிடுவது போல அசத்தலான ஹீரோயிசங்களை செய்கிறது ஈ! கலக்கலான டான்ஸ், பாடல், சண்டை, அதிர்ச்சி, மகிழ்ச்சி, அழுகை, தலையைக் கோதி ஸ்டைல் பண்ணுவது என்று அனைத்தயும் வெளிப்படுத்துகிற வகையின் ஈ-யை கிராஃபிக்சில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்மௌலி. பல இடங்களில் கிரேஸி மோகனின் வசனங்கள் பளிச்சென தெரிகிறது.

மனிதர்கள் பேசுவது எப்படி ஈ-க்கு புரியும், ஒரு சின்ன ஈ இவ்வளவு வேலைகள் செய்யுமா? ஈ எப்படி மனிதனைவிட புத்திசாலித்தனமாக சிந்திக்கும்? என பல கேள்விகள் படம் பார்ப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் அந்த கேள்விகளை ஓரம் தள்ளி வைத்துவிடுகிறது. இயக்குனரின் பிரம்மாண்டம். ஹாலிவுட் படத்துக்கு சவால்விடுகிற வகையில் பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். ‘பிரம்மாண்ட இயக்குனர்’ என்று சொல்லப்படுகிறவர்கள் இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசித்து படம் எடுத்தால் நல்லா இருக்கும்!

ஈயோடு அல்லல்படும் காட்சிகளிலும், அதன் இம்சைகளை கண்டு கோபப்பட்டு வில்லன் சுதீப் எடுக்கும் தற்காப்பு முயற்சிகள் அரங்கையே சிரிப்பலைகளால் அதிர வைக்கிறது. கண்களில் கலவரம், பயம், காமம், வெறி, பாதிப்பு என்று அமைதியான ஆனால் கொடுரமான வில்லத்தனம் என்று காட்சிக்கு காட்சி நம் மனதில் நிற்கிறார் சுதீப்.

சந்தானம், ஒரே சீனில் வந்தாலும் வழக்கமான நக்கல் நையாண்டியுடன் மனதில் பதிகிறார். தெலுங்கில் கமர்ஷியல் ஹீரோக்கள் பலரையும் வைத்து படம் எடுத்த ராஜமௌலி எந்த சூப்பர் ஹீரோயையும் நம்பாமல் சாதாரண ஈயை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி களம் இறக்கி சபாஷ் பெருகிறார். பிம்மாண்டம், பிரம்மிப்பு, புதுமை, என அனைத்து வார்த்தைகளும் நான் ஈ படத்துக்கு பொருந்தும்.

இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி, ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் என அனைவரும் ஈ-யோடு சேர்ந்து பிரம்மிக்க வைக்கிறார்கள்.

நான் ஈ - உண்மையான பிரம்மாண்டம்!

Comments