கே.வி.ஆனந்தின் உழைப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது" நடிகர் சூர்யா!!!

Saturday, 14th of July 2012
சென்னை::'மாற்றான்' படத்திற்காக இயக்குநர் கே.வி.ஆனந்தின் உழைப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று நடிகர் சூர்யா அவரை பாராட்டியிருக்கிறார்.

சூர்யா ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் 'மாற்றான்'. ஏஜிஎஸ் நிறுவனமும் ஈராஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, "நான் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 'மாற்றான்' படத்தில் நடித்தபோது தினமும் புது அனுபவமாக இருந்தது. இந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

2009ஆம் ஆண்டிலேயே இந்த படத்தை தொடங்குவதாக இருந்தோம். ஆனால், சில காரணங்களால் கொஞ்சம் காலதாமதமாக ஆரம்பித்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் ஒரு சவால். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும்போது, ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா? என்ற பயம் வரும். கே.வி.ஆனந்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் அவருடைய உழைப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்." என்று கூறினார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் பேசுகையில், "மாற்றான் படத்தில் ஊனமுற்றவர்களை அவமானப்படுத்துவது போல ஒரு காட்சி கூட வைக்கவில்லை. இதில் இரண்டு சூர்யாக்களையும், தெய்வ பிறவிகளாக காட்டியிருக்கிறோம். என்றவரிடம், இந்த படத்தின் கதையும், பிரியாமணி நடிக்கும் 'சாருலதா' கதையும் ஒன்றாமே? என்று கேட்டதற்கு, "அந்த படத்துக்கும், இந்த படத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. அது வேறு கதை. இது வேறு கதை. என்றார்.

'மாற்றான்' வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் இறுதிக்க்கட்டப் பணிகளை முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருப்பதால், வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

Comments