சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோயமுத்தூரில் தங்கப்போவதாக வந்துள்ள செய்திகள் குறித்து, ரஜினியின் உதவியாளர் விளக்கம்!

Wednesday,20th of June 2012
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோயமுத்தூரில் தங்கப்போவதாக வந்துள்ள செய்திகள் குறித்து, ரஜினியின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிக்காக கோவை ஆனைகட்டியில் வீடு தயாராவதாகவும், அங்கு அவர் சில காலம் தங்கியிருப்பார் என்றும் குமுதம் பத்திரிகையில் செய்தி வெளியானது. ரஜினிக்காக உருவாகும் வீடு என ஒரு படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை.

உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபோதே போயஸ்கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறப் போவதாக கூறப்பட்டது. ஆனால் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கினார்.

தற்போது கோவையில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே குடியேறப் போவதாக செய்தி பரவியது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்து அழகான பங்களா கட்டி வருவதாகவும், அந்த பங்களாவின் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விரைவில் அந்த பங்களா வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து ரஜினி குடியேறப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை ரஜினியின் உதவியாளர் மறுத்துள்ளார்.அவர் கூறும்போது, 'ரஜினி குடியேறப் போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. ரஜினி எங்கேயும் போகமாட்டார். சென்னையில்தான் குடியிருப்பார்' என்றார்.

Comments