ஜெனிலியா, தபு, வித்யா பாலனை நினைச்சிட்டு உற்சாகத்தோடு போனேன், ஆனால்..! - ஆர்யாவின் ஏமாற்றம்!!!

Friday, June, 01, 2012
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள உருமி திரைப்படத்தின் நாயகர்கள் ஆர்யா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, அந்தப் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிருத்விராஜ், “நேற்று (புதன் கிழமை) இரவுக் காட்சிக்கு சத்யம் திரையரங்குக்குச் சென்ற போது இது நம்ம படம்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது... அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக உருமி ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி…

உருமி மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். சந்தோஷ் சிவனின் திட்டமிட்ட உழைப்பில் கிட்டத்தட்ட 65 நாட்களில் எடுக்கப்பட்ட படம்.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று.

தமிழில் கலைப்புலி எஸ் தாணு முன்வந்தது போல ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும் உருமி வெளியாகும்," என்றார்.

ஆர்யா இந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்

இதுபற்றி அவர் கூறுகையில், "பிருத்திவிராஜுக்கு அப்பாவாக நடிக்கணும் என்ற போது கொஞ்சம் யோசித்தேன். ஆனால் கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து தான் நடித்தேன்.

படத்தில் வித்யாபாலன், ஜெனீலியா, தபு, நித்யாமேனன் என பலர் நடிக்கின்றனர் என்று கூறியதால் படப்பிடிப்பு ஜாலியாக இருக்கும்னு நெனச்சிக்கிட்டு உற்சாகவா போனேன். ஆனா என்னை மட்டும் தனியா வச்சி எடுத்திட்டாங்க.

அதுவும் மூணே நாட்களில் எடுத்துட்டாங்க. ஒருவேளை நான் கதைப்படி முந்தைய தலைமுறை ஆள் என்பதால், இந்த ஹீரோயின்களை கண்ணுலயே காட்டல போலிருக்கு...” என்றார்.

Comments