`துப்பாக்கி' என்ற தலைப்பில் விஜய் நடித்த சினிமா படத்தை வெளியிட தடை!!!

Thursday, 28th of June 2012
சென்னை::`துப்பாக்கி' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்த படத்திற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

கள்ளத்துப்பாக்கி

சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக `கள்ளத்துப்பாக்கி' என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம்.

கள்ளத்துப்பாக்கி படத்தை 2009-ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறேன். படத்தை இயக்குனர் லோகிதாஸ் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில், பிரபல நடிகர் விஜய் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்குகிறார். இதுசம்பந்தமான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார்.

இடைக்கால தடை

எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், `மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009-ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இப்போது துப்பாக்கி என்ற பெயரில் எதிர் மனுதாரர் தயாரிக்கும் படம் வெளியானால், தனக்கு இழப்பு ஏற்படும் என்றும், மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு 16.7.2012 வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டுள்ளார்.

Comments