ரஜினிக்கு பிறந்த நாள் பரிசு : கோச்சடையான் ரிலீசை தள்ளி வைக்க திட்டம்!!!

Monday, 25th of June 2012
சென்னை::கோச்சடையான்' பட ரிலீஸை தள்ளிவைக்க வேண்டும். அப்படத்தை ரஜினிக்கு பிறந்த நாள் பரிசாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. ரஜினியின் இரட்டை வேட படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதை கருத்தில் கொண்டு ஒற்றை வேடத்தில் உருவாக்கப்பட்டிருந்த ‘கோச்சடையான்' பட ஸ்கிரிப்ட்டை இரட்டை வேடத்துக்கு மாற்றினார் இயக்குனர் சவுந்தர்யா. ஆனால் இது பற்றி ரகசியம் காக்கப்படுகிறது. பட வட்டாரத்தில் விசாரித்தபோது சுவாரஸ்ய தகவல் கிடைத்தது.

மன்னர், இளவரசர் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ஜாக்கி ஷெராப்பும், நாசரும் எதிரி நாட்டு மன்னர்கள். ஜாக்கி ஷெராப்புடன் மன்னர் ரஜினி மோதுகிறார். பின்னர் இந்த பிரச்னை அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அப்போது இளவரசர் ரஜினிக்கும், ஜாக்கியின் மகன் ஆதிக்கும் பகை ஏற்படுகிறது. இதன் முடிவு எப்படி அமைகிறது என்பது கிளைமாக்ஸ். மோஷன் கேப்ச்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஹாங்காங், லண்டன் மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

இப்படத்தை சமீபத்தில் ரஜினி பார்த்தார். சவுந்தர்யாவின் இயக்கத்தில் அவருக்கு முழுதிருப்தி ஏற்பட்டதையடுத்து பாராட்டினார். ரஜினியின் இமேஜ் ரசிகர்களை கவரும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ். மேலும் தீபாவளி தினத்தில் இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாள் வருகிறது. பிறந்த நாள் பரிசாக ‘கோச்சடையான் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சவுந்தர்யாவிடம் நெருக்கமானவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரிலீஸை தள்ளிவைப்பதா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார் சவுந்தர்யா.

Comments