தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா துபாயில் பிரமாண்டமாக நடக்கிறது!!!

Thursday,14th of June 2012
சென்னை::தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, 21 மற்றும் 22ம் தேதிகளில் துபாயில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. தென்னிந்திய படங்களுக்கு சர்வதேச அளவில் விருது விழா நடத்தப்படவில்லை. அதை மாற்றும் விதமாகவும் தென்னிந்திய படங் களை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது விழா (சிமா) துபாயில் நடத்தப்படுகிறது. வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் துபாயில் பிரமாண்டமாக இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் பிரின்ட் மீடியா பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர். நான்கு மொழிக்கும் சேர்த்து வெளிநாட்டில் விருது விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை ரசிகர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அதிலிருந்து சிறப்பு ஜூரிகள் இறுதி விருது பட்டியலை முடிவு செய்வார்கள்.

விழாவின் முதல் நாளன்று நான்கு மொழிகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களின் பிரீமியர் நிகழ்ச்சி நடைபெறும். அந்தந்த படங்களின் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விழா நிகழ்ச்சிகளை நடிகர் மாதவன், நடிகைகள் லட்சுமி மஞ்சு, பார்வதி ஓமனக்குட்டன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள். இதுபற்றிய மேலும் தகவல்களை www.siima.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கலை நிகழ்ச்சியில் சமீரா ரெட்டி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, சார்மி, அமலா பால், தீக்ஷா சேத், பிரியாமணி, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Comments