Friday, 29th of June 2012சென்னை::இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழும் ரவி கே.சந்திரன், இயக்குநராகிறார். இவர் இயக்கப் போகும் முதல் படத்திற்கு ஜீவாவை ஹீரோவாக தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஒளிப்பதிவுக்காக பல விருதுகளை வாங்கியிக்கும் ரவி கே.சந்திரன், தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரதனம், ஷங்கர், கரன் ஜோஹர், ஆதித்ய ஜோப்ரா, ஃபரான் அக்தார், சஞ்சய் லீலா பன்சாலி, பிரியதர்ஷன், ராஜீவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது படங்களுக்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
40க்கும் மேற்பட்ட மாபெரும் வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ரவி கே.சந்திரன், முதன் முதலாக இயக்குநராகிறார். இவர் இயக்கும் படத்தை 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'கோ', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' ஆகியப் படங்களை தயாரித்தும், தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தை தயாரித்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற ரசுல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார். சாபுசிரில் கலை இயக்குநராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் இப்படத்திற்கான நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment