ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? - கமல் பேட்டி!!!

Saturday, 16th of June 2012
சென்னை::ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த மகிழ்ச்சியில் கமல் அளித்துள்ள பேட்டி:

"நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த படத்தை செய்வோம் என்று யாருக்கு தெரியும். சினிமாவில் எதுவும் நடக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு ஒவ்வொரு படமும் கடைசி படமாக இல்லை. நடிகர்களுக்கு மட்டுமே கடைசி படம் என்ற நிலை உள்ளது.

நான் ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே உழைக்கிறேன். 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு கூட அதே அளவு பிரச்சினைகள் சுற்றி இருக்கின்றன.

ஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அழகாக இருப்பதற்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என் தோற்றத்திற்காக அதையும் செய்யத் தயங்க மாட்டேன்!

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியை படமாக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அபபடியொரு சிந்தனை பரிசீலனையில் உள்ளது உண்மைதான்.

நான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரணம். பணமும் மரியாதையும் ஒருவரை தகுதியான தயாரிப்பாளராக ஆக்கி விடாது. தயாரிப்பு என்பது கூட ஒரு டெக்னிக்தான். நடிப்பை போல படங்களை தயாரிக்கவும் திறமை வேண்டும்.

200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள். சில தயாரிப்பாளர்கள் படத்தையே கெடுத்து உள்ளனர். மோசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போது நல்ல தயாரிப்பாளர்களையும் பார்க்கிறேன்.

ரஜினியும் நானும்...

ரஜினியும், நானும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நாங்கள் சேர்ந்து நடித்தால் வியாபாரத்தில் அந்த படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கும்?!"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments