தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவுக்கு தடை : ஐகோர்ட்!!!

Thursday, May, 24, 2012
சென்னை::திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதை அட்ஹாக் கமிட்டி நடத்துகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தாணு சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தாணு சார்பாக மூத்த வக்கீல் வி.டி.கோபாலன் ஆஜராகி, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், அட்ஹாக் கமிட்டி செயல்பட தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜூன் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அட்ஹாக் கமிட்டி 30ம் தேதி பொது குழு நடக்கும் என்று அறிவித்துள்ளது. இது சட்ட விரோதமானது. எனவே கமிட்டி பொது குழுவை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றார். இதைகேட்ட நீதிபதி அட்ஹாக் கமிட்டி வரும் 30ம் தேதி பொதுகுழு நடத்த இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Comments