நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!!!

Friday, ,May, ,11, 2012
சென்னை::நடிகை சினேகா கழுத்தில் பிரசன்னா 2 முறை தாலி கட்டினார். நடிகர், நடிகைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் வாழ்த்தினர். ‘சாது மிரண்டால்’, ‘சீனா தானா 007’, ‘பாணா காத்தாடி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரசன்னா. ‘என்னவளே’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, ‘பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சினேகா. இவர்கள் இருவரும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதல் இருவரும் நண்பர்களாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. ஒரு வருடத்துக்கும் மேலாக பார்ட்டி மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஜோடியாக வந்தனர்.

சினேகா நாயுடு வகுப்பை சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பை சேர்ந்தவர். இவர்களுக்கு காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்தது. அதனால், காதலிப்பதை இருவரும் மறுத்து வந்தனர். பின்னர் இருவீட்டாரும் சந்தித்து பேசியதில், சமரசம் ஏற்பட்டது. இரண்டு ஜாதி முறைப்படியும் திருமணம் நடத்த முடிவு செய்தனர். கடந்த வாரம் பிரசன்னா, சினேகா ஜோடியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதை தெரிவித்தனர். பிரசன்னா சினேகா திருமணம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்தது. முதலில் நாயுடு முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. பிரசன்னா காசி யாத்திரைக்கு செல்ல அவரை மச்சான்கள் சமாதானப்படுத்தி குடைபிடித்து மேடைக்கு அழைத்து வரும் சடங்கு நடந்தது. பின்னர் பிரசன்னா, சினேகா மாலை மாற்றும் சம்பிரதாயம் நடந்தது. அப்போது சினேகாவிடம் திருமண சேலையை பிரசன்னா குடும்பத்தினர் வழங்கினர். அதை மணமகள் அறைக்கு எடுத்துச் சென்று உடுத்தி வந்தார். மெரூன் நிற பட்டு சேலை சரசரக்க, தங்க நகை அலங்காரம் ஜொலி ஜொலிக்க மணமேடைக்கு வந்து பிரசன்னா அருகில் அமர்ந்தார் சினேகா. சரியாக காலை 9.50க்கு கெட்டி மேளம் முழங்க சினேகா கழுத்தில் தாலி கட்டினார் பிரசன்னா. பின்னர் பிராமண முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. பிரசன்னா பஞ்சகச்சம் கட்டி வந்தார். சினேகா மடிசார் அணிந்து மணக்கோலத்தில் வந்தார். சினேகா தனது தந்தையின் மடியில் அமர்ந்துகொள்ள பிரசன்னா அவருக்கு தாலி கட்டினார்.

திருமண விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி, நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சிபிராஜ், தாமு, இயக்குனர் கங்கை அமரன், நடிகை மஞ்சுளா, டைரக்டர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். முன்னதாக, நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணத்துக்காக சினேகாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் 9 கஜத்துடன் கூடிய 2 பட்டு சேலைகள் காஞ்சிபுரத்தில் பிரத்யேகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டன. இருமுறைப்படி நடந்த திருமணம் நடந்ததால் 2 சேலைகள் வாங்கப்பட்டது. மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெங்களூரில் உள்ள காஸ்டியூம் டிசைனரிடம் உடைகள் ஆர்டர் தரப்பட்டன. இருவருக்கும் ரோஸ் மற்றும் நீலம் கலந்த நிறத்தில் எம்பிராய்டரி வேலைகளுடன் கூடிய பிரத்யேக டிசைனில் உடை வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. இந்த உடைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

Comments