3 பட விவகாரம் சம்பந்தி என்பதால் ரஜினி பேரை இழுப்பதா? கஸ்தூரிராஜா கண்டனம்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::ரஜினி சம்பந்தி என்பதால் 3 படத்திற்கு அவர் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்பதா? என கஸ்தூரிராஜா கண்டனம் தெரிவித்தார். தனுஷ் நடிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் ‘3. இப்படம் வாங்கி நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், ரஜினி மகள், மருமகன் என்பதால் படத்தை வாங்கினேன். இதில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி தர வேண்டும் என்றும் தெலுங்கு பட அதிபர் நட்டிகுமார் கூறி இருந்தார். இதையடுத்து, ‘தனக்கும் 3 படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே ரஜினி ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்தநிலையில் ‘3 பட தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா நேற்று கூறியதாவது: 3 படத்தை வாங்கச் சொல்லி யாரையும் நான் வற்புறுத்தவில்லை. வினியோகஸ்தர்கள் விருப்பப்பட்டுதான் வாங்கினார்கள். தெலுங்கு டப்பிங் உரிமையை நட்டி குமார் என்பவர் 4.35 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டார். ஆனால் 2.50 கோடிதான் கொடுத்தார். மீதி 1.85 கோடி தர வேண்டும். அதை நான் திருப்பிகேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வருகிறார். இப்படத்தை நான்தான் தயாரித்தேன். ஐஸ்வர்யா ஒரு டெக்னீஷியன், தனுஷ் நடிகர் அவ்வளவுதான். அவர்களுக்கு தயாரிப்பில் சம்பந்தம் கிடையாது. ரஜினி எங்கோ உச்சத்தில் இருக்கிறார். அவர் 3 பட நஷ்டத்தை தரவேண்டும் என்று நட்டி குமார் கூறுகிறார். ரஜினி எனக்கு சம்பந்தி என்பதால் அவர் பெயரை இழுப்பது தவறு. எதுவாக இருந்தாலும் நட்டி குமார் என்னிடம்தான் பேச வேண்டும். லாபம் வந்தால் எந்த வினியோகஸ்தரும் பங்கு கொடுப்பது கிடையாது. நஷ்டம் வந்தால் அதை தயாரிப்பாளரிடம் கேட்பது சரி கிடையாது.

Comments