நடிப்புக்கு மட்டுந்தான் மசாலா; தயாரிப்புக்கு இல்ல! - பிரகாஷ்ராஜின் டெக்னிக்!!!

Saturday, April, 07, 2012
கதாநாயகர்களுக்கு ஈடாக வில்லன் நடிகர்களில் சிலர் மட்டுமே அதிகம் ரசிக்கப்படுகின்றனர். திரையில் வில்லன் வசனம் பேசும் காட்சிகளுக்கும் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றோர் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தனர். பின்னர் மக்களின் ஆதரவுடன் கதாநாயகனாக உயர்ந்தனர். ரகுவரன் வில்லனாக நடித்தாலும், பின்னர் குணசித்திர வேடங்களில் வெளுத்து வாங்கினார். ரஜினி, சத்யராஜ், ரகுவரனுக்குப் பிறகு, வில்லனாக நடித்தவர்களில் வரவேற்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் இந்தியாவின் பல முன்னணி கதாநாயகர்களுடன் மோதுவதில் (திரையில் தான்!) பிரகாஷ் ராஜ் எப்போதும் பிஸி. நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது ஆர்வம் கொண்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். தான் நடிப்பது கமர்ஷியல் மசாலா படங்கள் தான் என்றாலும், தான் தயாரிக்கும் படங்களில் மசாலாத்தனங்கள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார். (மசாலா இல்லைன்னா தமிழ்சினிமாவே இல்லையே..) 'டூயட் மூவில்' என்ற பேனரில் படங்களைத் தயாரிக்கும் பிரகாஷ் ராஜ் 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்', போன்ற படங்களை தயாரித்தார். தான் தயாரித்த 'அபியும் நானும்' படத்தின் கன்னட ரீமேக்கை தானே இயக்கினார். பின்னர், தமிழில் 'தோனி' படத்தை இயக்கினார். இப்போது, இயக்குநராக தன் அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கமர்ஷியல் படங்களின் படப்பிடிப்பிற்கு நடுவே, தன் படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சீக்கிரமே அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Comments