வித்யாவை வாட்டும் 'மனசெல்லாம்'!!!

Tuesday, April, 03, 2012
நடிகை வித்யா பாலன் தமிழில் 'மனசெல்லாம்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் இன்னும் அவரை வேதனைப்படுத்தி வருகிறதாம். வித்யா பாலன் என்றால் பாலிவுட் நடிகை என்று தானே நாம் நினைக்கிறோம். ஆனால் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே இரண்டு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் 'ரன்' படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துவிட்டு பின்னர் வேண்டாம் என்று கூறி மீரா ஜாஸ்மினை நடிக்க வைத்தனர். அடுத்து ஸ்ரீகாந்த் ஜோடியாக 'மனசெல்லாம்' படத்தில் நடிக்க வித்யா பாலனை ஒப்பந்தம் செய்தனர். 'மனசெல்லாம்' படத்தில் அவரும் சந்தோஷமாக நடிக்க வந்தார். ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களில் அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று கூறி அனுப்பிவிட்டு த்ரிஷாவை எடுத்தனர். இந்த இரண்டு படங்களுமே தமிழில் சூப்பர் ஹிட் ஆனவையாகும். இருப்பினும் நடிக்க வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்ட வித்யா பாலன் இந்தியில் மார்க்கெட்டைப் பிடித்தார். 'பா', 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' மூலம் தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். 'டர்ட்டி பிக்சர்ஸ்' அவருக்கு நடிப்புக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. இத்தனை சாதனைகளை படைத்தாலும் 'மனசெல்லாம்' படத்தில் இருந்து அவரை வெளியேற்றியதை நினைத்தால் இன்னும் வேதனையாக இருப்பதாக அண்மையில் அவர் தெரிவித்துள்ளார். அவரது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தைப் பார்த்துவிட்டு அவரை கோலிவுட்டில் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் இப்போது முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் 'ரெண்டு' படத்தோடு அனுஷ்காவை ஏறக்கட்டியது கோலிவுட். அவரும் மனம் உடையாமல் தெலுங்குக்குப் போய் வெற்றிக்கொடி நாட்டினார். அதன் பின்னர் அவரை நாடி ஓடினார்கள் தமிழ்ப்படவுலகினர். இவங்க எப்பவுமே இப்படித்தான்.

Comments