சிறப்பு ரயில் மாற்றுத் திறனாளிகள் திருப்பதி ட்ரிப்: கொடி அசைத்து வழியனுப்பிய ஹன்சிகா!!!

Wednesday,April,11,2012
சென்னையிலிருந்து மாற்றுத்திறனாளிகள் உள்பட 1008 மாணவ-மாணவிகள் சிறப்பு ரெயில் மூலம் திருப்பதி தரிசனம் காணச் சென்றனர். இந்த ரெயில் பயணத்தை சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தான் இளைஞர் சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் புட் பேங்க் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில் ஒன்று விடப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் உள்பட பள்ளி மாணவ-மாணவிகளின் திருப்பதி பயணம் நேற்று காலை தொடங்கியது. ரெயில் முழுவதும் வண்ண பலூன் மற்றும் காகிதப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஹன்சிகா மோத்வானி தொடங்கி வைத்தார்

சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரெயில் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பயணத்தில் 300 மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் உள்பட 1008 பேர் திருப்பதி சென்றனர்.

காலை 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

விழாவில், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்தராமன், நடிகை விந்தியா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பதி கோவிலை சுற்றிப்பார்த்து தரிசனம் முடித்து விட்டு மாணவ மாணவிகள் அனைவரும் பத்திரமாக சென்னை திரும்பினார்கள்.

Comments