அர்ஜுன் கட்டும் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது: புரோகிதர்கள் விசேஷ பூஜை!!!

Friday, April, 06, 2012
நடிகர் அர்ஜுன் சென்னை அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி வருகிறார். ஒரு ஏக்கர் நில பரப்பில் இந்த கோவில் உருவாகிறது. கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடக மாநிலம் கொய்ராவில் இருந்து ஆஞ்சநேயர் சிலை கொண்டு வரப்பட்டது.

ஒரே கல்லில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 28 அடி ஆகும். பீடத்துடன் சேர்த்து 35 அடி உயரம் ஆகும். எடை 140 டன். ஆஞ்சநேயர் சிலையை பீடத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா இன்று காலை நடந்தது.

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிலையை பீடத்தில் தூக்கி நிறுத்தி பிரதிஷ்டை செய்தனர். இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆஷா ராணி இரண்டு மகள்கள் பங்கேற்றனர். அப்பகுதியில் உள்ள ஏராளமான பொது மக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

ராமர் உள்ளிட்ட மேலும் பல கடவுள் சிலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. ஒரு வருடத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது குறித்து அர்ஜுன் கூறிய தாவது:-

இன்றைய தினம் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் ஆகும். ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆண்டவன் அருளால் இன்று சிலையை நிறுவி விட்டேன். ஒரு வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விடும்.

இவ்வாறு அர்ஜுன் கூறினார்.

Comments