த்ரிஷா,பிபாஷாவுடன் நெருக்கமா? ராணா பதில்!!!

Monday, April, 30, 2012
த்ரிஷா, பிபாஷாவுடன் நெருக்கமா என்றதற்கு ராணா பதில் அளித்தார்.
த்ரிஷாவுடன் காதல், பிபாஷாவுடன் டேட்டிங் செல்கிறார் என்று தெலுங்கு நடிகர் ராணா பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ராணா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
இந்தியில் ‘தம் மாரோ தம் படத்தில் நடித்தேன். பிபாஷா பாசு ஜோடியாக நடித்தார். அப்போதுமுதல் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். புத்தாண்டின்போது இருவரும் கோவா சென்றோம். இதுபற்றி என்னை கேட்காதவர்கள் இல்லை. ‘நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். கோவாவுக்கு நாங்கள் மட்டுமா சென்றோம். எங்களைப்போல் 200 பேருக்கு மேல் சென்றார்கள். அவர்களிடம் ஏன் இதுபோல் கேட்கவில்லை. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என்பதை இன்டர்நெட்டில் தெரிவித்துவிட்டேன். ஆனாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இருவரையும் இணைத்து பேசினால் அதில் அவர்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கிசுகிசுக்கள் முன்பு என்னை பாதித்தது. இப்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிபாஸுவை பொறுத்தவரை எனக்கு நெருக்கமான நண்பர். எனக்கு அடிபட்டபோது நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதைக்கூட காதல் என்று கதை கட்டுகிறார்கள். நண்பனுக்கு அடிபட்டால் இன்னொரு நண்பர் விசாரிக்க மாட்டாரா? எங்களை இணைத்து வைப்பதில் மற்றவர்கள் ஏன் குறியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல்தான் த்ரிஷாவுடனும் என்னை இணைத்து பேசினார்கள்.
எனக்கென்று ஒரு காதலி இருக்கிறார். அவர் ஐதராபாத்தில் உள்ளார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் சினிமா நடிகை கிடையாது. எனது திருமணம் பற்றியும் இப்போதைக்கு யோசிக்கவில்லை.
இவ்வாறு ராணா கூறினார்.

Comments