'கொலவெறி' நஷ்டத்தை ஈடுகட்ட தனுஷ்-ஐஸ்வர்யா சம்மதம்!!!

Sunday, April 22, 2012
'3' பட நஷ்டத்திற்கு அதற்கு ஈடு தர தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி டைரக்டர் அவதாரம் எடுத்த படம் '3'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் '3' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால் படம் வெளியாகி சரியாக போகவில்லை என்பது அனைவரின் கருத்து. இதனால் இப்படத்தை வெளியிட்ட சிலருக்கு பெருத்த நஷ்டம். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இப்படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நட்டி குமாருக்கு பலத்த நஷ்டம். இதனால் நஷ்ட ஈடு கேட்டு இருந்தார் நட்டி குமார். இதற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நஷ்ட ஈடு தர சம்மதம் சொல்லியுள்ளனர். இதுகுறித்து நட்டி குமார் கூறியுள்ளதாவது, தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் '3' படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்டேன். ஆனால் படம் சரியாக போகாததால் எனக்கு 80 சதவீதம் நஷ்டம். சினிமாவில் நஷ்டம் என்பது இயல்பு தான். ஆனால் '3' படத்தின் நஷ்டம் ஈடு செய்ய முடியாதது. '3' படத்தை குறைந்த செலவில் தான் தயாரித்தார்கள். ஆனால் 'கொலவெறி' பாட்டை வைத்து எக்கச்சக்க பணத்திற்கு விற்றுவிட்டார்கள். எனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜவை தொடர்பு கொண்டேன், ஆனால் முடியவில்லை. அதேசமயம் நஷ்டம் தொடர்பாக தனுஷும், ஐஸ்வர்யாவும் ஈடுகட்டுகிறோம் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி கூறியது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Comments