மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!!!

Tuesday, April, 03, 2012
மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூடு அவுட்டான நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த ஷூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நீண்டநாள் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த 17-ம் தேதி ரஜினி, சவுந்தர்யா, சரத்குமார் உள்ளிட்ட 'கோச்சடையான்' படக்குழுவினர் லண்டன் புறப்பட்டு சென்றனர். அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வந்தது. நேற்று கூட ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட 'கோச்சடையான்' படக்குழுவினர் இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து பேட்டியளித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக இன்று காலை சென்னை திரும்பியுள்ளார். இதுபற்றி விசாரித்த போது ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே தங்களது படங்களான '3' மற்றும் 'கோச்சடையான்' படங்களை புரோமட் செய்வதில் பிரச்சினை உருவாகி இருப்பதாகவும், இதனால் அப்செட்டான ரஜினி ஷூட்டிங்கை ரத்து செய்து சென்னை திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments