எனக்கு 'மீடியா கூச்சம்' அதிகம்: என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி!!!

Monday, April 02, 2012
எனக்கு 'மீடியா கூச்சம்' அதிகம்: என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி!

மீடியாவில் இயல்பாக பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மீடியா கூச்சம் அதிகம், என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையான் படத்துக்காக இரு தினங்களுக்கு முன் லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அவருடன் சௌந்தர்யாவும் ஏ ஆர் ரஹ்மானும் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, செய்தியாளர்களின் அத்தனை கேள்விகளுக்கும் ரொம்ப சரளமாக பதிலளித்தார் ரஜினி.

ஆனால் பேட்டியின்போது 'அடிப்படையில் நான் ரொம்ப Media shy person!' என்று குறிப்பிட்டார்.

இந்த பேட்டியின்போது கோச்சடையான் குறித்து ரசிகர்களுக்கு ரஜினி தந்த உத்தரவாதம், 'நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சர்வதேச தரத்தில் இருக்கும்,' என்பதுதான்.

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு (நவம்பர் 13) நிச்சயம் வெளியாகிவிடும் என்றார் ரஜினி.

அவர் கூறுகையில், "நான் இப்போது 90 சதவீதம்... ஏன் முழுமையாகவே நன்றாக இருக்கிறேன். என் ரசிகர்களின் பிரார்த்தனைகள், வேண்டுதல்களுக்கு நன்றி

இந்தப் படத்தில் நான் பாடியது அல்லது பேசியது ஒரு புதிய அனுபவம். ரசிகர்களுக்கு வித்தியாசமான பாடலாக அமையும்.

எனக்கு லண்டன் நகரை எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வர விரும்பும் நகரங்களில் ஒன்று. 25 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் டாக்டர் முரளியுடன் படப்பிடிப்புக்கு வந்தபோதே, இங்கு ஒரு வீடு வாங்க விரும்பினேன். ஆனால் பின்னர் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. இனி வாங்குவேன்," என்றார்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பற்றிய கேள்விக்கு, என்னைப் பொறுத்தவரை அமிதாப்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும், அவருடன் ஒரு படம் இணைந்து நடிக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவித்தார் ரஜினி....

"ஒவ்வொரு படத்தையுமே எனது முதல் படமாக கருதி நடிப்பதாகவும்'' அவர் தெரிவித்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை குறிப்பிட்ட ரஜினிகாந்த், தற்போது 90 சதவீதம் குணம் அடைந்துவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.

"கோச்சடையான் படம் குழந்தைகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக அமையும். வருகிற நவம்பர் மாதம் 13ந் தேதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்'' என்று ரஜினி கூறினார்.

21 வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த் தனது சொந்தக்குரலில் இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறார். அதுபற்றி குறிப்பிட்ட அவர், இந்த படத்தில் பாடியது புதிய அனுபவமாக இருந்ததாகவும், இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பேட்டியின்போது ரஜினியுடன் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்த படத்தில் இசைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டோம். மேலும் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

Comments