தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி : எஸ்.ஏ.சந்திரசேகரன் 6 மாதம் நீக்கம்!!!

Monday, April, 16, 2012
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரனை 6 மாத காலம் நீக்கியிருப்பதாக, அட்ஹாக் கமிட்டி சார்பில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில், தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும், ‘அட்ஹாக் கமிட்டி’ என்ற பெயரில் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெப்சிக்கு ஆதரவாக தீர்மானத்தில் கையெழுத்து போட்டார் என்றும், இதனால் தலைவர் பதவியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அட்ஹாக் கமிட்டியினர் போராட்டம் நடத்தினர். ‘ராஜினாமா செய்ய முடியாது’ என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் 20 பேர், யாரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர் என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில் அட்ஹாக் கமிட்டி சார்பில் சென்னை நூறடி சாலையிலுள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமை தாங்கினார். அப்போது செயலாளர் கே.முரளிதரனிடம், 19 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதை முக்தா சீனிவாசன் உட்பட சில மூத்த தயாரிப்பாளர்கள் படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தனர். பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாற்று அணியினர் சார்பில் ஏதாவது பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் அவரது அணியினரை தாக்கி பலர் ஆவேசமாகப் பேசினர். அப்போது தயாரிப்பாளர்கள் ரிஷிராஜ், தமிழரசன் உட்பட சிலர், எதிர்த்து குரல் கொடுத்தனர். இதையடுத்து அட்ஹாக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய இருவரும் ‘இங்கு நடப்பது பொதுக்குழு கூட்டமே இல்லை. எங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றனர். பிறகு அவர்கள், கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, வெளியேறினர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், அட்ஹாக் கமிட்டியினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர். பின்னர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க உதவிய தமிழக முதல்வருக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்திற்கு சங்கத்தை விட்டு நீக்கி வைக்க, அட்ஹாக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்.

பெப்சி பேச்சுவார்த்தையை தொடர, அட்ஹாக் கமிட்டிக்கே முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 4 மாத காலத்துக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிதியை நிர்வாகம் செய்யவும், காசோலைகளில் கையெழுத்து போடவும் எனக்கும், கே.முரளிதரனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு கேயார் பேசுகையில், ‘ 350க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பெப்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவோம். இதற்கு முன் 15 சங்கங்களுக்கான புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சங்கங்களுக்கான பேச்சுவார்த்தை தொடரும்’’ என்றார். பெப்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அட்ஹாக் கமிட்டி சார்பில், அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் ஏ.வி.எம் முருகன், முக்தா சீனிவாசன், ஏ.வி.எம் சரவணன், கே.ஆர்.ஜி., கேயார், ஆர்.பி.சவுத்ரி, புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், பஞ்சு அருணாசலம், கே.முரளிதரன், டி.சிவா, ஆர்.கே. செல்வமணி, ஹென்றி, சி.வி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, வி.எம்.செல்வன், வி.சேகர், ஜெமினி ராகவா, சோழா பொன்னுரங்கம், கருணாஸ், பாலாஜி என, 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments