நடிகர் தர்மேந்திரா,சபனா ஆஸ்மி உள்பட 51 பேருக்கு பத்ம விருதுகள்: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்!!!

Thursday, April 05, 2012
புதுடெல்லி::கலை, இலக்கியம், மருத்துவம், வர்த்தகம், பொதுநலச்சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறது. இந்த ஆண்டு பத்ம விருது வழங்குவதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் தர்பார் அரங்கில் நேற்று கோலாகலமாக நடந்தது.

விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், வர்த்தகத்துறை மந்திரி ஆனந்த் சர்மா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது விருதான பத்ம விபூஷண் விருது மறைந்த கார்டூனிஸ்ட் மரியோ மிராண்டாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதை அவரது மகன் ராகுலிடம் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, ஜனாதிபதியிடம் பத்மபூஷண் விருதினைப் பெற்றபோது, தர்பார் அரங்கில் பார்வையாளர்கள் வரிசையில் கரவொலி எழுந்தது. இதேபோன்று பிரபல நடிகையும், சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி பத்மபூஷண் விருதுபெற்றார்.

வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டாடா உருக்கு நிறுவன துணை தலைவர் பி.முத்துராமன், கணிதவியல் வல்லுனர் ரகுநாதன், வக்கீல் பி.சந்திரசேகரராவ், ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் விட்டல், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ஜார்ஜ் யாங்க். பூன் எவோ உள்ளிட்டவர்களுக்கும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பு செய்தார்.

தொழில் அதிபர் சுவாதி பிரமால், நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன், முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ்.நடராஜன், முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் ஜப்பார் இக்பால், வில்வித்தை வீரர் லிம்பா ராம், கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சதுர்வேதி, ஒடிசி கலைஞர் மினாட்டி மிஸ்ரா, இஸ்ரோ பேராசிரியர் யக்னசாமி உள்பட 38 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

நேற்றைய விழாவில் மொத்தம் 51 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல ஓவியக்கலைஞர் கே.ஜி.சுப்பிரமணியன் (பத்மவிபூஷண் விருது), சத்தியநாராயண் கோயங்கா, ஜோஸ் பெரைரா (பத்மபூஷண் விருது) ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

இவர்களுக்கு மற்றொரு நாளில் விருது வழங்கப்படும். கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த விழாவில் ஏற்கனவே பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு விட்டது நினைவு கூறத்தக்கது.

Comments