தனுஷ் , ஸ்ருதி நடித்த 3 படத்தால், ஆந்திர வினியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்கிறார் ரஜினிகாந்த்!!!

Wednesday,April,18, 2012
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் ‘3’. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் படம் வெளிவரும் முன்பே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்திருப்பதாக ஆந்திர சினிமா வினியோகஸ்தர் நட்டி குமார் கூறியுள்ளார். ஆந்திர நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தது தொடர்பாக என்டிடிவி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடல் சூப்பர்ஹிட் ஆனதால் ‘3’ படத்தின் தெலுங்கு பட உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ‘தனுஷின் தெலுங்கு மார்க்கெட் ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடையாது. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாய்?’ என்று நண்பர்கள் கேட்டார்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையாலும் ஐஸ்வர்யா தனுஷ் முதன்முதலாக இயக்கும் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பியும்தான் அதிகளவு முதலீடு செய்தேன். மேலும், படத்தின் தோல்விக்கு தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ஆகியோரும் காரணம். படத்தை விளம்பரப்படுத்த ரூ.1 கோடிக்கு அதிகமாக செலவு செய்தேன். ஆனால், பட விளம்பரத்துக்காக கட்டாயம் ஐதராபாத் வருவதாக சொல்லியிருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வரவில்லை. படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டபோதும் வரவில்லை என்று நட்டி குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, நட்டி குமாருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதாக ரஜினிகாந்தும் ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் தனது ‘பாபா’, ‘குசேலன்’ படங்களால் வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தபோது சொந்தமாக பணம் வழங்கி ஈடுகட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது என என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments