'3' படத்தை தாய் சரிகா பாராட்டினார்: ஸ்ருதி ஹாசன் பேட்டி!!!

Monday, April, 09, 2012
சென்னை::நடிகர் கமலஹாசனின் மகளும், சமீபத்தில் வெளியான '3' படத்தின் நாயகியுமான ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:-

தமிழ் தவிர பிற மொழிகளிலும் நடித்து வருகிறேன். எனினும், அதிகமாக பேசப்படும் படம் '3' ஆகும். எனது கேரக்டரும், நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. நான் நடிக்கும் படம் வெளியாகும்போது எனது நெருங்கிய நண்பர்கள் இருவரிடமும், எனது பெற்றோரிடமும் அந்த படத்தை பற்றிய அவர்களது கருத்தை கேட்பேன்.

எனது தந்தை ஒரு நடிகர் என்ற முறையில், அவரின் கருத்தையும் கேட்பேன். ரொம்ப பிடித்திருப்பதாக அவர் சொல்வார். நான் சந்தோஷப்படுவேன். உண்மையிலேயே அவருடைய மகள் என்பதற்காக என்னை அவர் பாராட்டமாட்டார். விமர்சிப்பதில் அவர் பாரபட்சம் காட்டமாட்டார். அவர் விமர்சனம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும்.

அவரது விமர்சனம் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அவர் ஒருபோதும் அறிவுரை கூறுவது கிடையாது. ஆலோசனைகளை மட்டுமே வழங்குவார். சினிமாவில் நடிக்கும்போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். பிற பாத்திரங்களுடன் (ரோல்) ஒப்பிட்டு பார்க்க கூடாது என்பார். அவரது இந்த பாடமே, சினிமாவில் நான் வெற்றி பெற வழிகாட்டியாக இருக்கிறது.

'3' படத்தின் இந்தி மொழி பதிப்பை பார்த்து விட்ட எனது தாயார் சரிகா, என் நடிப்பை பாராட்டினார். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், அந்த பாத்திரமாகவே நான் மாறி விடுவேன். '3' படத்தில் வரும் அழுகை காட்சி கூட, சினிமாவுக்காக ஒப்புக்காக அழவில்லை. அந்த பாத்திரத்தின் வலியை உணர்ந்து அழுதேன்.

'3' படத்துக்கு பிறகு, நான் நடித்து வரும் படம் 'கபால் சிங்', 'தபாங்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். கதாநாயகள் பவன் கல்யாண். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. எனக்கு சந்தோஷமான அனுபவத்தை இந்த படம் தந்தது. நான் எந்த மொழியில் நடித்தாலும், அந்த கேரக்டருக்கு தகுந்தவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.

கிராமப் பெண் வேடம் எனக்கு சவாலாக அமைந்திருந்தது. அதையும் சிறப்பாக செய்தேன். நான் சிறு வயது முதலே கவிதைகள் எழுதி வருகிறேன். விரைவில் இவற்றுக்கு இசை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். எனக்கு இசையும் ரொம்ப பிடிக்கும். முறைப்படி இசை கற்றிருக்கிறேன். சமயம் வரும் போது இசை அமைப்பேன். எனது பாடலையும் சினிமாவில் பயன்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments