வீட்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றினார்: நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்!!!

Sunday, April, 22, 2012
சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவிக்கிஷன்(வயது 42). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா வீடு ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார்.

ஆனால், பேசிய பணத்தை தராமல், ரூ.1 கோடியே 75 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு, மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.

முதலில், ரூ.2 1/2 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால், பணம் இல்லாமல் செக் திரும்பிவந்தது. மீதியுள்ள ரூ.7 1/2 லட்சம் பணத்தை கேட்டபோதும், பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு, இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments