மோசடி புகார்- கந்தா படத் தயாரிப்பாளர் கைது!!!

Friday, March 23, 2012
ஒரே வீட்டை இருவருக்கு விற்ற மோசடியில் கந்தா படத் தயாரிப்பாளர் பழனிவேல் கைது செய்யப்பட்டார்.

சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் வசித்து வருபவர் சினிமா தயாரிப்பாளர் பழனிவேல். கரண் நடித்துள்ள 'கந்தா' படத்தை தயாரித்துள்ளார்.

விருகம்பாக்கம் சண்முகசுந்தரம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள 835 சதுர அடி வீட்டை ஆர்.கே. பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கினார்.

பின்னர் இந்த வீட்டை விற்பனை செய்ய ராஜகோபால் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தார். இதன் அடிப்படையில் அந்த வீட்டை கணேசன் என்பவருக்கு விற்றார் விற்றார் ராஜகோபால்.

ஆனால் இதன் பிறகு அதே வீட்டை பழனிவேல், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சன் என்பவருக்கு ரூ. 33 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

மேலும் இந்த வீட்டின் ஆவணங்களை சென்னை சென்ட்ரல் வங்கியில் வைத்து ரூ. 18 லட்சம் பணத்தையும் பழனிவேல் கடனாக வாங்கியுள்ளார்.

இந்த விவரங்கள் தெரிய வந்த பிறகு, வீட்டை வாங்கிய சிவரஞ்சன் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடி பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன், இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் தயாரிப்பாளர் பழனிவேல் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிவேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments