மரணப் பள்ளத்தாக்கில் விழுந்த ஹீரோவை காப்பற்றிய சூப்பர் சுப்பராயன்!!!

Thursday, March 22, 2012
படப்பிடிப்பின்போது 4000 அடி ஆழமுள்ள மரணப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த ஹீரோவை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் காப்பாற்றினார்.

திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் 'என் பெயர் குமாரசாமி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.

ஏறத்தாழ 4000 அடி ஆழமுள்ள மரணப் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஹீரோ ராமும், புதுமுகம் யுவாவும் உரையாடுவது போன்ற காட்சி ஒன்றை இயக்குநர் ரதன் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் உதவியுடன் படமாக்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரும் எதிர்பாராவண்ணம் ஹீரோ ராம் அந்த மாபெரும் மலைச் சரிவில் நிலை தடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயண் பாய்ந்து சென்று ராமை பள்ளத்தாக்கில் விழாமல் காப்பாற்றினார். இதனால் நேரவிருந்த ஒரு விபத்து தடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சற்று நேரம் படப்பிடிப்பு தடைபட்டு அங்கு பரபரப்பு நிலவியது. சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்தக் காட்சியில் ராம் துணிச்சலுடன் நடித்து முடித்தார். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சூப்பர் சுப்பராயன் ஹீரோ ராமுக்கு அறிவுரை கூறினார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பானுபிரியா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரபல போஜ்புரி நாயகி அந்தரா பிஸ்வாஸ் நாயகியாக நடிக்க, ராதாரவி, பப்லு, ரிஷா, பாத்திமா பாபு, யோகி தேவராஜ் இவர்களுடன் மலையாள காமெடியன் பைஜு தமிழில் அறிமுகமாகிறார்.

தஷி இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரது, தாணு கார்த்திக், தொல்காப்பியன், சாந்தி தேசிங் ஆகியோர் எழுதுகிறார்கள். ஜீவ சாண்டில்யன் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.விஜயன் படத்தொகுப்பை கவனிக்க, சூப்பற் சுப்பராயண் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

Comments