தமிழ் சினிமாவே ஸ்தம்பித்து நிற்கும்போது விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது? - கேயார்!!!

Saturday, March 24, 2012
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பட்டு நிற்கிறதோ என கேள்வி எழுப்பும் அளவுக்கு சங்க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைகள் விடுவதும் பேட்டிகள் தருவதுமாக உள்ளனர்.

பெப்சி - தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையால் படப்பிடிப்புகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இது குறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கேயார் கூறுகையில், "தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

இயக்குனர் பாலசந்தர் இப்பிரச்னையில் தலையிட இருப்பதால் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெப்சி பதவியில் இருந்து பாலசந்தர், பாரதிராஜா இருவருமே கடந்த 19ம் தேதி விலகிவிட்டனர்.

பதவியில் இல்லாத போது எப்படி அவர் இந்த பிரச்னையில் தலையிட முடியும். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறேன்.

36 நாட்களாக மற்ற படப்பிடிப்புகள் நடைபெறாத போது, விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எப்படி நடைபெற்றது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதே இதை காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

அதேநேரம் தமிழ் சினிமாவுக்கென்று தனியாக தொழிலாளர் அமைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Comments