ஹீரோ- ஹீரோயின் இல்லாத படம்!!!

Saturday, March 10, 2012
சென்னை;;கல்யாண சீன் எடுப்பதற்காக 46 நாள் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கல்யாண விருந்துபோட்டது பட குழு. இதுபற்றி ‘கண்டுபிடி கண்டுபிடி’ பட இயக்குனர் ராம் சுப்பாராமன் கூறியதாவது: தேனி பக்கத்தில் கல்யாண வீட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை மையமாக வைத்து இக்கதையை உருவாக்கினேன். கல்யாண வீட்டில் காலையில் தொடங்கி மதியம் வரை நடக்கும் சம்பவங்களில் முழுகதையும் முடிந்துவிடும். இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. காதலும் கிடையாது. யதார்த்தமான கதாபாத்திரங்களாக தருண் சத்ரியா, முரளி, ஐஸ்வர்யா தேவன் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக சீமான் நடிக்கிறார். இக்கதையில் ஒரு சஸ்பென்ஸும் இருக்கிறது. ஒரு கல்யாணம் எப்படி நடக்க வேண்டும், எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்லும்.
இதன் ஷூட்டிங் தேனி, கம்பத்துக்கு இடையே உள்ள உத்தமபாளைய கல்யாண மண்டபத்தில் நடந்தது. தேனியில் வாழும் 120 பேர்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்ததோடு துணை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் நடித்துள்ளனர். கல்யாண சீனிலே தொடங்கி அதிலேயே கதை முடிவதால் எல்லோருக்கும் ஒருமுறை மட்டுமே காஸ்டியூம் தேவைப்பட்டது. 46 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. 46 நாள் கல்யாணம் நடத்தியதுபோல் தினமும் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதன் ஷூட்டிங் முடிந்தது. ஒளிப்பதிவு சுகுமார். தயாரிப்பு கல்கி யுவா, சாம் சிவராஜ். இயக்குனர்கள் அகத்தியன், பிரபு சாலமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அவர்கள் சாயலில் இப்படம் இருக்காது.

Comments