சினேகா படாத கஷ்டமே இல்ல....! - அம்மா பத்மாவதி!!!

Monday, March 26, 2012
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சினேகா, என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கல்யாண பத்திரிக்கை கொடுக்க, பட்டுப்புடவை எடுக்க, நகை வாங்க என்று கல்யாண வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருக்கும் சினேகா அம்மா பத்மாவதி முதன்முறையாக சினேகாவை பற்றியும், அவரது கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...

சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. 'விரும்புகிறேன்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடக்குட்டி. ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை. அவ்வளவு பிரச்சினையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. சினேகா என்றதால் எல்லாவற்றையும் சமாளிச்சு, எல்லாவற்றையும் கடந்து பல வெற்றி படங்களில் நடித்து மக்கள்கிட்ட நல்ல பெயர் எடுத்து, ஒரு நிலையான இடத்தை பிடித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் வர 'ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது. அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து, அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள்.

மே மாதம் சினேகா-பிரசன்னா திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நெருங்க, நெருங்க எல்லோருக்கும் ஏற்படுகிற திருமண பதட்டம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. வீட்டில் இருக்கும்போது சினேகா என் ரூம்க்கு வந்து ஒரு நாளைக்கு 4முறையாவது ஐ லவ் யு மம்மி என்று சொல்லுவாள். சினேகாவிற்கு இப்ப வரைக்கும் நான் தான் சாப்பாடு தரணும், அவ்வளவு செல்லமா வளர்த்துவிட்டோம். சமீபத்தில் தாம்பூலம் மாற்ற பிரசன்னா வீட்டிற்கு சென்றோம். அங்கு பிரசன்னா அம்மா-அப்பா சொல்ற விஷயத்தை அப்படியே சினேகா கேட்டார். மேலும் நீங்க எந்த விசேஷம் என்றாலும் சொல்லுங்க நானும் கலந்து கொள்கிறேன், விரதம் எல்லாம் இருப்பேன் என்று சினேகா சொன்னார். பிரசன்னா குடும்பத்தாரின் அனைத்து கண்டிஷன்களுக்கும் சினேகா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினேகா-பிரசன்னா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளோம். இதற்காக அடையாறில் ஒரு வீடு பார்த்துள்ளோம்.

சினேகாவுக்கு, இதுவரைக்கும் சமைக்க தெரியாது. இப்பத்தான் என் கூட சமையல் அறையில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு வருகிறாள். கல்யாணத்திற்கு சென்னையில் பல கடைகளில் பட்டுப்புடவை வாங்கிட்டோம். அப்புறம் ஐதரபாத், மும்பையில் கொஞ்சம் டிரஸ் வாங்கியிருக்கோம். மேலும் மெகந்தி விழாவுக்காக சினேகா விரும்பி ஒரு தங்க அணிகலன் கேட்டார். அதனால் அவருக்காக அதை ஸ்பெஷலாக வாங்கியிருக்கோம். இரண்டு பேரும் குடும்பமும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு பேர் குடும்பம் சார்பிலும் திருமணம் நடத்த உள்ளோம். சினேகா 2 முதல்வரிடமும் விருது வாங்கியிருக்கிறார். இதுதவிர நந்தி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். இப்போது சினேகா, 'ஹரிதாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டீச்சராக நடிக்கிறார். இந்தபடத்திற்கும் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சினேகாவை சினிமாவில் நடிக்காதே என்று பிரசன்னா எதுவும் சொல்லவில்லை. அது அவருடைய விருப்பம் என்று கூறிவிட்டார். இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சினேகா இன்னும் முடிவு செய்யவில்லை. எங்க வீட்டு கடைசி பெண்ணின் கல்யாணம். அதனால் அவளுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய, சந்தோஷமாக இருக்க எல்லோரும் வேண்டுங்க என்று பணிவோடு கேட்டுக் கொண்டு தனது பேட்டியை முடித்தார் பத்மாவதி. பதினாறும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம்.....!

Comments