எக்கச்சக்க துணி - கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய சோனா!!!

Tuesday, March 13, 2012
சென்னை விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான துணிகளைக் கொண்டு வந்த நடிகை சோனா, அதற்கான வரியைச் செலுத்தாமல் சுங்க அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். கடைசியில், பணத்தை பின்னர் செலுத்திவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு கிளம்பினார்.

அடிக்கடி வெளிநாடு போய் புதுப்புது துணிகள், பேஷன் பொருட்களை வாங்கி வருபவர் சோனா. இது அவரது வியாபாரமும் கூட.

நேற்று நள்ளிரவு பாங்காங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தார் சோனா. இதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது நடிகை சோனா கொண்டு வந்த உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அவர் ரூ.27 ஆயிரத்திற்கும் அதிகமான ரெடிமெட் துணிகளை கொண்டு வந்தது தெரிய வந்தது (தாய்லாந்தில் துணிகளின் விலை மிகக் குறைவு!).

"இந்த துணிகளுக்கு சுங்க தீர்வை கட்ட வேண்டும்'' என்று சுங்க இலாகா அதிகாரிகள் சோனாவிடம் கூறினார்கள்.

ஆனால் நடிகை சோனா சுங்க தீர்வை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் நடிகை சோனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் செலுத்தவே மாட்டேன் என மல்லுக்கட்டிப் பார்த்தார் சோனா.

'சுங்க தீர்வை செலுத்தாமல் பொருட்களை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' என்று அதிகாரிகள் கறாராகக் கூறினார்கள்.

அதற்கு சோனா, 'என்னிடம் இப்போது பணம் இல்லை; சுங்க தீர்வையை நானோ என் உதவியாளரோ செலுத்தி பொருட்களை எடுத்து செல்கிறேன்' என்று கோபமாகக் கூறி விட்டுச் சென்றார்.

Comments