அப்புக்குட்டி... அன்றே சொன்னார் இளையராஜா!!!

Thursday, March 08, 2012
சென்னை::அழகர்சாமியின் குதிரை பேசப்படும், அதை விட அதன் நாயகன் அப்புக்குட்டி வெகுவாக பேசப்படுவார் என்று அன்றே சொல்லியிருந்தார் இசைஞானி இளையராஜா. இன்று ஊரெல்லாம் பேசும் முகமாக மாறியுள்ளார் அப்புக்குட்டி.

அழகர்சாமியின் குதிரை படம் வந்தபோதே அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டவர் அப்புக்குட்டி. காரணம், அப்படத்தில் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பு. அத்தனை பேரையும் அப்புக்குட்டியும், அந்த குட்டிக் குதிரையும் மனதை கவ்விக் கொண்டு போய் விட்டார்கள்.

இன்று அப்புக்குட்டி இந்திய அளவில் சிறந்த து்ணை நடிகராக உயர்ந்துள்ளார். இது நிச்சயம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதில் சந்தேகமில்லை. அப்புக்குட்டி இப்படி பார்க்கப்படுவார், கவனிக்கப்படுவார், அங்கீகரிக்கபப்டுவார் என்பதை அழகர்சாமியின் குதிரை பட ஆடியோ விழாவிலேயே இசைஞானி இளையராஜா முன்னுரைத்திருந்தார்.

அந்த விழாவில் இளையராஜா பேசுகையில், இங்கு அப்புக்குட்டி வந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கிடைப்பதைப் போன்ற வரவேற்பு கிடைத்ததைப் பார்த்தேன். அதற்காக அப்புக்குட்டி ரஜினியாகி விட முடியாது. ரஜினி செய்வதை நிச்சயம் அப்புக்குட்டியால் செய்ய முடியாது. அதேபோல இந்தப் படத்தில் அப்புக்குட்டி செய்திருப்பதை ரஜினியால் செய்ய முடியாது.

அழகர்சாமியின் குதிரை படம் வந்த பிறகு அப்படமும், அப்புக்குட்டியும் பெரிதாக பேசப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

அவர் கணித்தபடியே இன்று பேசப்பட்டு வருகிறார் அப்புக்குட்டி. திரையுலகில் நிச்சயம் அப்புக்குட்டி போன்ற வளரும் கலைஞர்களுக்கு இதுபோன்ற விருதுகள் மிகப் பெரிய டானிக் என்பதில் சந்தேகமில்லை.

அப்புக்குட்டி சீக்கிரம் 'பெரிய குட்டியாக' மாறி இதை விடப் பெரிய அங்கீகாரத்தைப் பெறுங்கள்...!

Comments