இப்போதைக்கு திருமணத்துக்கு பை... சினிமாவுக்கு ஹாய்! - அனன்யா பல்டி!!!

Saturday, March 24, 2012
திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்று பல்டியடித்துவிட்டார் அனன்யா.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை அனன்யா, ஒரு பெரிய நடிகையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்ட்டார். குறிப்பாக அவரது கடைசி படமான எங்கேயும் எப்போதும் நன்றாக ஓடியதால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வந்தன.

இந்த நேரத்தில்தான் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு திடீரென திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமண தேதியை சீக்கிரம் முடிவு செய்து அறிவிப்போம் என்றும் அனன்யா கூறினார்.

முன்னணி நடிகையாக வளரும்போது அனன்யா திருமணத்துக்கு சம்மதித்தது தமிழ், மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருப்பதாக தெரிவித்தார். அனன்யாவும், இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும், ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என்றும் உறுதியாக அறிவித்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தன.

ஆனால் தற்போது அனன்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.

மீண்டும் முழு நேரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.

திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ''திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் அவசரப்பட முடியாது.

சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய சாதித்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்,'' என்றார்.

ஆஞ்சநேயனுடன் அனன்யா திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

Comments