ஜெயலலிதா குழந்தையாக இருந்தபோது படம் பார்த்த திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் மூடப்பட்டது!!!

Tuesday, March 06, 2012
சென்னை: மவுனப் படங்கள் வந்த காலத்திலேயே கட்டப்பட்டு பின்னர் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட ஸ்டார் திரையரங்கம் மூடப்பட்டது.

சென்னையில் பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.

என்பின்ஸ்டோன், சயானி, வெலிங்டன், குளோப் என்கிற அலங்கார், நடராஜ், உமா, ராம், புவனேஸ்வரி, ராக்கி, மேகலா, வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட், ஆனந்த், பாரகன், ப்ளாஸா, சித்ரா, கெயிட்டி, ராஜ குமாரி, நாகேஷ் என 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. கடைசியாக லிபர்டி மூடப்பட்து.

இப்போது அந்தப் பட்டியலில் ஸ்டார் தியேட்டரும் இடம்பெற்றுவிட்டது. இந்த தியேட்டர் திருவல்லிக்கேணியில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாரத்’ இங்கு 400 நாட்கள் ஓடியது. இதை கேள்விப்பட்டு தர்மேந்திராவே இந்த தியேட்டருக்கு வந்து படம் பார்த்து பாராட்டினாராம்.

எம்.ஜி.ஆரின் ‘நாளை நமதே’, ‘சந்திரலேகா’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ போன்ற படங்களும் இங்கு 100 நாட்களை தாண்டி ஓடி உள்ளன.

ஸ்ரீபிரகாசா, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் கவர்னர்கள் இங்கு படம் பார்த்துள்ளனர். அண்ணா, ஜெமினிகணேசன், என்.வி.என்.நடராஜன், வி.என்.ஜானகி, விஜயகுமாரி, என்.எம்.ராஜம் போன்றோரும் இந்த தியேட்டரில் படம் பார்த்து உள்ளார்கள்.

இன்றைய முதல்வர் ஜெயலலிதா குழந்தையாக இருந்தபோது தாய் சந்தியாவுடன் இந்த தியேட்டரில் படம் பார்த்ததாக தியேட்டரின் பழைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

நல்ல நிலையில் இருந்த திரையரங்கம், காலமாற்றத்தில் பிட்டு பட தியேட்டர் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. எப்படியிருந்தாலும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த ஒரே திரையரங்கமான ஸ்டார் மூடப்பட்டதில் அந்தப் பகுதி சினிமா ரசிகர்களுக்கு மகா வருத்தமாகிவிட்டது!

Comments