ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் முதல் தமிழ்ப் படம் 'இனியவளே காத்திருப்பேன்'!!!

Friday, March,30, 2012
முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள், நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம் 'இனியவளே காத்திருப்பேன்'.

ஒரு மணிநேரம் 15 நிமிடம் ஓடும் முழுமையான இந்த திரைப்படத்தை, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் மல்டிமீடியா துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி, எடிட்டிங், காமிரா உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்துள்ள ஈழன் இளங்கோ, இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

படத்துக்கு இசை உதயன். இரண்டு பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களுக்கு மட்டும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு இசையமைப்பாளர் கவி இசையமைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தினேஷ் நாயகனாகவும், நிலோஷா நாயகியாகவும், தயா நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பிரதானமா இடம்பெறும் அம்சங்கள் கத்தி, துப்பாக்கி, ரத்தம்தான்.

ஆனால் முதல் முறையாக கத்தி ரத்தமில்லாமல், ஒரு அழகான குடும்ப சித்திரமாக 'இனியவளே காத்திருப்பேன்' படத்தை உருவாக்கியுள்ளார் ஈழன் இளங்கோ.

படத்தில் இடம்பெறும் ஒரு தாத்தா பாத்திரத்தில், முதுபெரும் ஈழத்து நடிகர் ரகுநாதன் நடித்துள்ளார். இவர்தான் அன்றைய சிலோனின் முதல் தமிழ் நடிகர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர். தற்போது பிரான்ஸில் வசிக்கிறார். படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ், ஆஸ்திரேலியா' நிறுவனம் தயாரித்துள்ளது.

மே அல்லது ஜுன் மாதங்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது 'இனியவளே காத்திருப்பேன்'.

Comments