சங்கரன்கோவில் தொகுதியில் நடிகை குஷ்பு பிரசார கூட்டத்தில் திடீர் சலசலப்பு: பா.ஜனதா தொண்டர்கள் எதிர்த்து கோஷமிட்டனர்!!!

Saturday, March 10, 2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரசாரம் தொடங்கினார்.

பிரசார வேனில் நின்றபடி மாலை 6.30 மணி அளவில் தேவர்குளம் மெயின்ரோட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் பகுதிக்கு சினிமா சூட்டிங்கிற்காக வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் சங்கரன்கோவில் பகுதிக்கு வந்து இருக்கிறேன். நான் சினிமா நடிகை என்ற முறையில் பிரசாரத்துக்கு வரவில்லை. தி.மு.க. தொண்டர்களில் ஒருத்தியாக உங்களிடம் வந்து உள்ளேன்.

தமிழக அரசியலில் பொதுத்தேர்தலின் போது, மக்கள் அலை எந்தப்பக்கம் சாய்கிறதோ, ஒட்டு மொத்தமாக ஒரு கட்சியை தேர்ந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இடைத்தேர்தல் என்பது மிகமுக்கியமானது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் வகையில், இடைத்தேர்தலில் தகுதியான வேட்பாளரை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள்.

பொதுவாக உயர் அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதற்கு குறைந்தது 6 மாதமாவது செலவிட வேண்டும். ஆனால், 6 நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்குவோம் என்று தெரிவித்தார்கள். இதுவரை வழங்கியதாக தெரியவில்லை. காரணம் கேட்டால் தானே புயல் ஏற்பட்டதால் வழங்க முடியவில்லை என்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல், அறிவித்தப்படி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம். சமீபத்தில் கூடங்குளம் பிரச்சினைக்காக அமைச்சரவை கூட்டப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் பற்றி பேசவில்லை, சங்கரன்கோவில் தொகுதியை பற்றித்தான் அனைவரும் பேசி உள்ளார்கள்.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

பின்னர் சங்கரன்கோவில் தேரடி திடலில் பிரசாரம் செய்ய இரவு 8 மணி அளவில் குஷ்பு அங்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து சில கார்களும் வந்தன. அப்போது அங்கு பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன், பா.ஜனதா வேட்பாளர் முருகனை ஆதரித்து அங்கு பேசிக்கொண்டு இருந்தார். திரளானவர்கள் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில், நடிகை குஷ்பு அங்கு பேசத் தொடங்கினார். ஒரே இடத்தில் 2 பிரசாரங்கள் நடந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை குஷ்பு பேசத் தொடங்கியதும் இல.கணேசன் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கட்சியினர் குஷ்புவை கண்டித்தும், அவரது பிரசாரத்துக்கு அனுமதி அளித்த போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இருந்தாலும் குஷ்பு தொடர்ந்து பேசினார். பின்னர் அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு கழுகுமலை ரோட்டில் அடுத்த கட்ட பிரசாரத்துக்கு குஷ்பு சென்றார். இதைத் தொடர்ந்து இல.கணேசனும் அங்கிருந்து ராஜபாளையம் ரோடு வழியாக பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

இதனால் தேரடி திடல் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தோல்வி பயத்தில் அதிமுக அரசு - குஷ்பு விளாசல்!!!

சங்கரன் கோயில்: தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் 32 அமைச்சர்களைக் களமிறக்கியுள்ளது அதிமுக அரசு. இதுதான் இவர்களின் சாதனை, என்றார் நடிகை குஷ்பு.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை அவர் சந்தித்தார்.

அதிமுக அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர் என்று தனது பேச்சில் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "அதிமுக அரசு பதவியேற்று 10 மாதங்கள் ஆகியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் திமுகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. தமிழக மக்கள் புத்திசாலிகளாச்சே. நாம இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற பயம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுதான் அதிமுகவின் ஒரே சாதனை. இந்த சாதனையைச் செய்ய யாராலும் முடியாது," என்றார் கிண்டலாக!

Comments