'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி'!!!

Friday, March,30, 2012
சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் முப்பத்திரண்டு லட்சம் ஆண், பெண் கபடி வீரர்களும் வீராங்கனைகளும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. இவ்வளவு பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட கபடி விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் தேவா, மகளிர் கபடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.

கவிஞர் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை தேவா பாடியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இசைஞானி இளையராஜா- தேனிசைத்தென்றல் தேவா இருவரது பேத்தியான லய வர்ஷினி இதில் பாடியிருக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் 'மைனா' பாபி நடனம் அமைத்திருக்கிறார்.

'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... எல்லாரையும் மறந்துபுட்டு கொஞ்ச நேரம் வா நீ... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' என்று தனது காந்த குரலில் தேவா பாடுவதை கேட்கிற யாரும் ஆட்டம் போடாமல் இருக்க முடியாது.

ஒரு இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த பாடலில் இசையமைப்பாளர் தேவாவே தோன்றி பாடியிருப்பதுதான் இன்னும் கலகலப்பு. இதற்காக முழுசாக ஒருவாரம் கால்ஷீட் கொடுத்திருந்த தேவா, பிரபல நடன இயக்குனர் பாபி சொல்லிக் கொடுத்த மாதிரி சில மூவ் மென்ட்சுகளையும் செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து வந்த தேவா, இந்த பாடலில் ஆட சம்மதித்தற்கு காரணமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான்.

துடிப்பும் துள்ளலுமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கபடி ரசிகர்கள் முன்னிலையில், பதினாறு மாவட்டங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் நடந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.வி.ராமலிங்கம் சி.டி யை வெளியிட, இயக்குனர் 'சத்யம்' ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.

பைரவா கிரியேஷன்ஸ்-ஜெயம் விஷன்ஸ் தயாரிக்க, சிட்டாடல் ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.

விழாவில் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது:

"கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பாடிக் கொண்டே ஆடுகிற ஒரே விளையாட்டு கபடிதான். இது தமிழர்களோட பாரம்பரியமான விளையாட்டு. மூச்சு அடைத்து பாடும்போது நுரையீரலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற விளையாட்டு இது. இந்த விளையாட்டை பெண்களும் ஆடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு இணையாக என்று நினைக்கும்போது நிஜமாகவே பெருமையாக இருக்கிறது. எத்தனையோ பாடல்களை நான் உருவாக்கியிருந்தாலும் இந்த பாடலை உருவாக்கிய பிறகு என்னையறியாமல் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. உலக அளவில் கபடிக்காக பிரத்யேகமாக உருவான பாடலும் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்."

துள்ளாட்டம் போட வைக்கும் இந்தப் பாடல் விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

Comments