'பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான்...!'- எல்.ஆர்.ஈஸ்வரி!!!

Monday, March 26, 2012
எங்க ஊரு மாரியம்மா .. உள்பட பல அம்மன் பாடல்களுக்குப் பெயர் போன எல்.ஆர்.ஈஸ்வரியை இப்போது தமிழ் சினிமாக்காரர்கள் குத்துப்பாட்டுகளுக்கு மொத்தமாக குத்தகை எடுத்து விட்டார்கள் போல. ஒஸ்தியில் இடம் பெற்ற குத்துப் பாட்டைத் தொடர்ந்து இன்னொரு குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்துள்ளார் ஈஸ்வரி.

எலந்தப் பயம், துள்ளுவதோ இளமை, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை உள்பட பல ஹஸ்க்கியான பாடல்களைப் பாடி பெரும் பிரபலம் ஆனவர் ஈஸ்வரி. இதே ஈஸ்வரி பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற அருமையான பாடல் இன்றளவும் திருமணக் கூடங்களில் முக்கியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பின்னாளில் அம்மன் பாடல்களுக்கு அக் மார்க் முத்திரையாக ஈஸ்வரியின் குரல் விளங்கியது. இப்படி எந்தப் பாடல் பாடினாலும் அதில் உச்சத்தைத் தொட்ட பெருமைக்குரியவர் ஈஸ்வரி. இந்த நிலையில் தற்போது அவரை குத்துப் பாட்டுகளுக்கு கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.

ஒஸ்தி பாடத்தில், அட்டகாசமான குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்த ஈஸ்வரிக்கு இப்போது குத்துப் பாடல்கள் பாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பா என்று அவரும் அசந்து போய்தான் நிற்கிறாராம். இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் தடையறத் தாக்க என்ற படத்தில் குத்துப் பாட்டுக்குப் பாடியுள்ளாராம் ஈஸ்வரி. தமன் இசையமைத்துள்ளார்.

பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் என்று ஆரம்பிக்கும் இப்பாடலுக்கு செமத்தியான குத்தாட்டம் போடவிருப்பவர் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான தேபி தத்தா. நெய்யில் போட்டு முக்கி எடுத்த திராட்சைப் பழம் போல தகதகவென இருக்கிறார் தேபி தத்தா.

ஏற்கனவே இவர் பானா காத்தாடி, மங்காத்தா ஆகிய படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய அனுபவம் கொண்டவர் தேபி. இப்போது தடையறத் தாக்க படத்திலும் தனது தகதக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இப்பாடலை ஈஸ்வரியுடன் சேர்ந்து அருண் விஜய் பாடியுள்ளார். தெலுங்குப் பட டான்ஸ் மாஸ்டரான நோபிள்தான் இந்தப் பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் வகையில் ஆட்டம் அமைத்துள்ளாராம்.

இப்பாடலின் மூலம் தேபி தத்தா எங்கேயோ போகப் போகிறார் என்கிறார்கள்.

Comments