நடிகை அல்போன்சாவின் காதலர் தற்கொலை- தற்கொலைக்கு அல்போன்சா முயற்சி:

Monday, March 05, 2012
சென்னை::கடந்த சில வருடங்களாக முன்னாள் கவர்ச்சி நடிகை அல்போன்சாவுடன் குடும்பம் நடத்தி வந்த அவரது காதலர் வினோத் குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவரை அல்போன்சா தரப்பினர் அடித்தே கொன்று விட்டதாக வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் அல்போன்சாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்ஷா படம் மூலம் குத்தாட்ட நடிகையாக அறிமுகமானவர் அல்போன்சா. தொடர்ந்து பல படங்களில் டான்ஸ் ஆடியுள்ளார். பின்னர் இவர் நடனத்தை நிறுத்தி விட்டார். தான் காதலித்து வந்த வினோத்குமாருடன் என்பவருடன் சேர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அல்போன்சாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், வினோத்குமார் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதும் அல்போன்சாவும் ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அல்போன்சாவின் காதலர் தற்கொலை,அல்போன்சாவின் தற்கொலை முயற்சி ஆகியவற்றால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்போன்சாவின் உடன் பிறந்த தம்பிதான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பது நினைவிருக்கலாம்.

துபாய் கலை நிகழ்ச்சிக்கு போய் வந்ததால் அல்போன்சா- காதலர் இடையே தகராறு?


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.

அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

Comments